இளம்பூரணர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   54
Zoom In NormalZoom Out


 

வது, பிறர்மனை நயவாமை. மேல்,  காமநீத்த  பாலினானும்  என்று
ஓதுகின்றாராகலின், இது மனையறத்தின் நின்றோரை நோக்கவரும்.

உதாரணம்

"பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்(கு)
அறனொன்றோ ஆன்ற ஒழுக்கு."           (குறள் - 148)

எட்டுவகை  நுதலிய   அவையகமும்  -  எட்டுப்  பாகுபாட்டைக்
குறித்த அவையகமும்.

எட்டுவகை  குறித்த அவையகம் என்றமையான், ஏனைய அவையின்
இவ்வவை   மிகுதி   உடைத்தென்றவாறு. அவையாவன:- குடிப்பிறப்பு,
கல்வி,  ஒழுக்கம்,   வாய்மை, தூய்மை, நடுவுநிலைமை, அழுக்காறாமை அவாவின்மை என்பன.

அவை எட்டினானும் அவை வருமாறு:

"குடிப்பிறப் புடுத்துப் பனுவல் சூடி
விழுப்பேர் ஒழுக்கம் பூண்டு நாமுற
வாய்மைவாய் மடுத்து மாந்தித் தூய்மையின்
காத லின்பத்துள் தங்கித் தீதறு
நடுவுநிலை நெடுநகர் வைகி வைகலும்
அழுக்காறு இன்மை அவாஅ இன்மையென
இருபெரு நிதியமும் ஒருதாம் ஈட்டும்
தோலா நாவின் மேலோர் பேரவை
உடனமர் இருக்கை ஒருநாட் பெறுமெனின்
பெறுகதில் அம்ம யாமே வரன்முறைத்
தோன்றுவழித் தோன்றுவழிப் புலவுப் பொதிந்து
நின்றுழி நின்றுழி ஞாங்கர் நில்லாது
நிலையழி யாக்கை வாய்ப்பஇம்
மலர்தலை உலகத்துக் கொட்கும் பிறப்பே." 
                                   (ஆசிரியமாலை)

கட்டமை ஒழுக்கத்து கண்ணுமையும்   -    கட்டுதல்    அமைந்த
ஒழுக்கத்தினைக் குறித்த நிலையினும்.

அஃதாவது,   இல்லறத்திற்கு  உரித்தாக  நான்கு  வருணத்தார்க்குச்
சொல்லப்பட்ட அறத்தின்கண்நிற்றல்.  அவையாவன;  அடக்கமுடைமை,
ஒழுக்கமுடைமை,    நடுவுநிலைமை,    வெஃகாமை,    புறங்கூறாமை,
தீவினையச்சம்,    அழுக்காறாமை,    பொறை  யுடைமை    என்பன.
மிகுதியாகலின், வாகை யாயின.

அடக்க முடைமையாவது, பொறிகள் ஐம்புலன்கள் மேல் செல்லாமை
அடக்குதல்.

உதாரணம்

"ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப்பு உடைத்து"             (குறள். 126)

ஒழுக்கமுடைமையாவது,     தங்குலத்திற்கும்     இல்லறத்திற்கும்    ஒத்த
ஒழுக்கமுடையராதல்.

உதாரணம்

"ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.                   (குறள். 131)

நடுவுநிலைமையாவது,  பகைவர்  மாட்டும்  நட்டார்  மாட்டும் ஒக்க
நிற்கும் நிலைமை.

உதாரணம்

"சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க்கு அணி."            (குறள். 118)

வெஃகாமையாவது, பிறர் பொருளை விரும்பாமை.

உதாரணம்

"படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்
நடுவன்மை நாணு பவர்."                   (குறள். 172)

புறங்கூறாமையாவது, ஒருவரை அவர் புறத்துரையாமை.

உதாரணம்

"அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன்
புறங்கூறான் என்றல் இனிது."                (குறள். 181)

தீவினையச்சமாவது, தீவினையைப் பிறர்க்குச் செய்தலை அஞ்சுதல்.

உதாரணம்

"தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்
தீவினை என்னுஞ் செருக்கு."                (குறள். 311)

அழுக்காறாமையாவது,     பிறர்     ஆக்கம்  முதலாயின  கண்டு
பொறாமையால் வரும் மனக்கோட்டத்தைச் செய்யாமை.

உதாரணம்

"ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து
அழுக்கா றிலாத இயல்பு."                   (குறள். 161)

பொறையுடைமையாவது, பிறர் தமக்கு    மிகுதியாகச்    செய்தவழி
வெகுளாமை.

உதாரணம்

"மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம்தம்
தகுதியான் வென்று விடல்."                (குறள். 158)

பிறவும் இந்நிகரனவெல்லாம் கொள்க.

இடையில்   வண்புகழ்க்கொடையும்   -   இடைதலில்லாத வளவிய
புகழினைத் தரும் கொடையும்.

அஃதாவது,   கொடுத்தற்கு      அரியன   கொடுத்தல்.   இதுவும்
பாகுபாடு  மிகுதிப்படுதலின் வாகையாயிற்று.

உதாரணம்

"மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர்
தம்புகழ் நிறீஇத் தாமாய்ந் தனரே
துன்னருஞ் சிறப்பின் உயர்ந்த செல்வர்
இன்மையின் இரப்போர்க்கு ஈஇ யாமையின்
தொன்மை மாக்களின் தொடர்பறி யலரே
தாள்தாழ் படுமணி இரட்டும் பூநுதல்
ஆடியல் யானை பாடுநர்க்கு அருகாக்
கேடில் நல்லிசை வயமான் தோன்றலைப்
பாடி நின்றனென் ஆகக் கொன்னே
பாடுபெறு பரிசிலன் வாடினன் பெயர்தல்என்
நாடிழந் ததனினும் நனிஇன் னாதென
வாள்தந் தனனே தலையெனக்கு ஈயத்
தன்னிற் சிறந்தது பிறிதொன்று இன்மையின்
ஆடுமலி உவகையொடு வருவல்
ஓடாப் பூட்கைநின் கிழமையோற் கண்டே."     (புறம். 165)

பிழைத்தோர்த் தாங்கும் காவலும் - தம்மாட்டுப்   பிழைத்தோரைப்
பொறுக்கும் ஏமமும்.

உதாரணம்

"தம்மை இகழ்ந்தமை தாம்பொறுப்ப தன்றிமற்
றெம்மை இகழ்ந்த விளைப்பயத்தால் - உம்மை
எரிவாய் நிரயத்து வீழ்வர்கொல் என்று

பரிவதூ