இளம்பூரணர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   59
Zoom In NormalZoom Out


 

ள் புக்காள் முரண் அவியா
வள்ளெயிற்றுக் கூற்றத்தின் வாய்."
                       (புறப்.சிறப்பிற் பொதுவியல்- 5)

மலர்தலை  உலகத்து மரபு நன்கு அறிய பலர் செல செல்லாக் காடு
வாழ்த்தொடும் -   இடம்   அகன்ற உலகத்தின் மரபு நன்கு விளங்கப்
பலரும் மாயத் தான் மாயாத புறங்காடு வாழ்த்துதலும்.

உதாரணம்

"களரி பரந்து கள்ளி போகிப்
பகலுங் கூவுங் கூகையொடு பேழ்வாய்
ஈம விளக்கின் பேஎய் மகளிரொடு
அஞ்சுவந் தன்றிம் மஞ்சுபடு முதுகாடு
நெஞ்சமர் காதலர் அழுத கண்ணீர்
என்புபடு சுடலை வெண்ணீறு அவிப்ப
எல்லார் புறனுந் தான்கண்டு உலகத்து
மன்பதைக் கெல்லாந் தானாய்த்
தன்புறங் காண்போர்க் காண்பறி யாதே."       (புறம்.356)

நிறை    அருஞ்சிறப்பின்    இரண்டு  துறை  உடைத்து  -  ஆக
நிறையும் அருஞ்சிறப்பினையுடைய இரண்டு துறைகளையுடைத்து.

[இச்    சூத்திரத்தில்  வந்த அத்தும் ஆனும் முறையே சாரியையும்
இடைச் சொல்லுமாம்]                                      (19)

78. பாடாண் பகுதி கைக்கிளைப் புறனே
நாடுங் காலை நாலிரண் டுடைத்தே.

இது, பாடாண்திணை ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.

பாடாண்    பகுதி   கைக்கிளைப்  புறன் - பாடாண் திணைப்பகுதி
கைக்கிளை   என்னும்  அகத்திணைக்குப் புறனாம்; நாடும் காலை நால்
இரண்டு உடைத்து  - அஃது   ஆராயும்   காலத்து எட்டுவகையினை உடைத்து.

அவையாவன:-    கடவுள் வாழ்த்துவகை, வாழ்த்தியல்வகை, மங்கல
வகை, செவியறிவுறுத்தல்,    ஆற்றுப்படைவகை,     பரிசிற்றுறைவகை, கைக்கிளைவகை,  வசைவகை  என்பன.   அவையாமாறு    முன்னர்க்
காட்டுதும்.

அதற்கு     இது புறனாயவாறு என்னை யெனின், கைக்கிளையாவது
ஒரு நிலத்திற்கு உரித்தன்றி ஒருதலைக் காமமாகி வருமன்றே அதுபோல
இதுவும் ஒருபாற்கு உரித்தன்றி ஒருவனை ஒருவன் யாதானும் ஒரு பயன் கருதியவழி   மொழிந்து     நிற்பது   ஆகலானும்,  கைக்கிளையாகிய
காமப்  பகுதிக்கண்  மெய்ப்பெயர்பற்றிக்   கூறுதலானும்,   கைக்கிளை
போலச்  செந்திறத்தாற்  கூறுதலானும்,    அதற்கு  இது  புறனாயிற்று.
நோந்திறமாவது கழிபேரிரக்கம்; செந்திறமாவன அஃது அல்லாதன. (20)

79. அமரர்கண் முடியும் அறுவகை யானும்
புரைதீர் காமம் புல்லிய வகையினும்
ஒன்றன் பகுதி ஒன்றும் என்ப.

இது, பாடாண் பாட்டிற்கு உரியதொரு பொருண்மை   உணர்த்துதல்
நுதலிற்று.

அமரர்கண்    முடியும்   அறுவகையானும் -  அமரர்கண் முடியும்
கொடிநிலை   கந்தழி   வள்ளி   புலவராற்றுப்படை  புகழ்தல் பரவல்
என்பனவற்றினும்.

புரைதீர்     காமம்     புல்லிய   வகையினும்  -  குற்றந்  தீர்ந்த
காமத்தைப் பொருந்திய வகையினும்.

அஃதாவது, ஐந்திணை தழுவிய அகம்.

ஒன்றன்   பகுதி   ஒன்றும்  என்ப  - அவையிற்றின் ஒரு கூற்றின்
பாகுபாடு பாடாண் திணை யாதற்குப் பொருந்தும் என்பர் புலவர்.

அஃதாவது,    கொடிநிலை முதலிய ஆறும் கடவுட் புகழ்ச்சியின்றிப்
பாட்டுடைத்தலைவனைச் சார்த்தி   வருதல்,   காமப்பகுதியிற்   பாடும்
பாட்டுடைத்      தலைவனைச்     சார்த்தி      வருதல்     என்ற
இவ்விருவகையானும்  ஒருவனைப் புகழ்தலாற் பாடாண்பாட்டு ஆயிற்று.

இன்னும்  'புரைதீர் காமம் புல்லிய வகையினும் ஒன்றன்பகுதி' என்ற
அதனான் ஐவகைப்பொருளினும் ஊடற்பொருண்மை பாடாண்  பகுதிக்கு
ஒன்றும்     என்றவாறாம்.      இன்னும்    இதனானே  இயற்பெயர்
சார்த்திவாராது   நாடும்  ஊரும்  இதுவென  விளங்க  வரும்  ஊரன்
சேர்ப்பன்  என்னும்  பெயரினான்  ஒரு  கூறு  குறிப்புப்பற்றி  வரும் பகுதியும் பாடாண்பாட்டாம் என்றும் கொள்க.

80. வழக்கியல் மருங்கின் வகைபட நிலைஇப்
பரவலும் புகழ்ச்சியும் கருதிய பாங்கினும்
முன்னோர் கூறிய குறிப்பினும் செந்துறை
வண்ணப் பகுதி வரைவின் றாங்கே.

இது, சில பொருட்கண் வரும் வேறுபாடு உணர்த்துதல் நுதலிற்று.

வழக்கியல்     மருங்கின்   வகைபட நிலைஇ பரவலும் புகழ்ச்சியும்
கருதியபாங்கினும்  -  மேற்  சொல்லப்பட்டன வழக்கு இயலும் பக்கத்து
வகைபெற   நிறுத்திப்   பரவலும்  புகழ்ச்சியும்  கருதிய  பக்கத்தினும்,
முன்னோர்      கூறிய  குறிப்பினும்   -   முதலாசிரியர்      கூறிய
காமக்குறிப்பினும், செந்துறை வண்ணம் பகுதி வரைவு  இன்று ஆங்கு-
செந்துறைப்பாட்டின்  கண்  வரும்    வண்ணப்பகுதி வரைதல் இல்லை
அவ்விடத்து.

குறிப்பு     என்பது   காமம்  ஆமாறு  வருகின்ற   சூத்திரத்துள்"
 “காமப்பகுதி   கடவுளும்    வரையார்"   (புறத்திணை.23) என
ஒட்டி எழுந்தமையான் உணர்க.

இதனாற்  சால்லியது, தேவபாணியும் அகப்பொருள் பாடும் பாட்டும்
இசைத்தமிழில்   வரைந்து   ஓதினாற்போலச்  செந்துறைப்  பாட்டிற்கு
உரிய      செய்யுள்   இவை    என்று     உரைத்தல்     இல்லை
பாடாண்பாட்டின்கண் வருங் காலத்தென்பது. எனவே எல்லாச் செய்யுளும் ஆம் என்றவாறு.

இனி, புகழ்தல் படர்க்கைக்கண்ணும், பரவல் முன்னிலைக்  கண்ணும்
வருமாறு:

"கண்ணகன் ஞாலம் அளந்ததூஉம் காமருசீர்த்
தண்ணறும் பூங்குருந்தம் சாய்த்ததூஉம் - நண்ணிய
மாயச் சகடம் உதைத்ததூஉம் இம்மூன்றும்
பூவைப்பூ வண்ணன் அடி."    (திரிகடுகம்;கடவுள் வாழ்த்து)

இது புகழ்தல்.

"வைய மகளை அடிப்படுத்தாய் வையகத்தார்
உய்ய உருவம் வெளிப்படுத்தாய்