இளம்பூரணர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   66
Zoom In NormalZoom Out


 

கு முதலாயின. காலங் கண்ணுதலாவது, வருங்காலங் குறித்தல்.

உதாரணம்

"ஆடியல் அழற்குட்டத்து
ஆர்இருள் அரையிரவின்
முடப் பனையத்து வேர்முதலாக்
கடைக்குளத்துக் கயங்காயப்
பங்குனி உயர் அழுவத்துத்
தலைநாண்மீன் நிலைதிரிய
நிலைநாண்மீன் அதன் எதிர் ஏர்தரத்
தொல்நாள்மீன் துறைபடியப்
பாசிச் செல்லாது ஊசி முன்னாது
அளர்க்கர்த்திணை விளக்காகக்
கனையெரி பரப்பக் காலெதிர்பு பொங்கி
ஒருமீன் விழுந்தன்றால் விசும்பி னானே
அதுகண், டியாமும் பிறரும் பல்வே றிரவலர்
பறையிசை அருவி நன்னாட்டுப் பொருநன்
நோயில னாயின் நன்றுமற் றில்லென
அழிந்த நெஞ்சம் மடியுளம் பரப்ப
அஞ்சினம்"                              (புறம்.221)

என்பது பிறவாறு நிமித்தம் கண்டு அஞ்சியது.

"....................................
புதுப்புள் வரினும் பழம்புள் போகினும்
விதுப்புறல் அறியா ஏமக் காப்பினை
அனையை ஆகல் மாறே
மன்னுயிர் எல்லாம் நின்அஞ் சும்மே."          (புறம்.20)

என்பது புள்பற்றி வந்தது.

"காலனுங் காலம் பார்க்கும்"                   (புறம்.41)

என்னும் புறப்பாட்டு, நிமித்தம்பற்றி வந்தது.

"நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்
அல்லது செய்தல் ஓம்புமின்                 (புறம்.195)

என்பது ஓம்படைபற்றி வந்தது.

உளப்படஞாலத்துவரும்  நடக்கையது  குறிப்பின் காலம் மூன்றொடு
கண்ணிய   வருமே  -   இவை  உளப்படத்  தோன்றும்  வழக்கினது
கருத்தினானே காலம் மூன்றனொடும் பொருந்தக் கருதுமாற்றான்  வரும்
மேற்கூறி வருகின்ற பாடாண்திணை.                          (30)

இரண்டாவது புறத்திணை இயல் முற்றிற்று.

இவ்வோத்து   என்ன   பெயர்த்தோ  எனின்,  களவியல் என்னும்
பெயர்த்து. களவொழுக்கம் உணர்த்தினமையாற் பெற்ற பெயர்.அஃதாதல்
ஈண்டு   உரைக்கின்றதனால்  பயன்  இன்றாம்;  களவென்பது   அறம்
அன்மையின்   [எனில்],    அற்றன்று;    களவு    என்னும்   சொற்
கண்டுழியெல்லாம்  அறப்பாற்படாதென்றால்   அமையாது,  களவாவது,
பிறர்க்குரிய  பொருள்  மறையிற்கோடல்,   இன்னதன்றி,  ஒத்தார்க்கும்
மிக்கார்க்கும் பொதுவாகிய கன்னியரைத்  தமர் கொடுப்பக் கொள்ளாது,
கன்னியர்,  தம்  இச்சையினால்  தமரை மறைத்துப்  புணர்ந்து பின்னும்
அந் நிலை வழாமல்  நிற்றலால்  இஃது  அறமெனப்படும் அன்னதாதல்
இச் சூத்திரத்தானும் விளங்கும்.

அஃதற்றாக,  மேலை ஓத்தினோடு இவ்வோத்திற்கு இயைபு என்னை
மெனின், மேல் கைக்கிளை முதற் பெருந்திணை இறுவாயாக எழுதிணை
ஓதி அவற்றின் புறத்து     நிகழுந்     திணைகளும்  ஓதிப்போந்தார்.
அவ்வெழுதிணையினும் ஒருதலை    வேட்கையாகிய    கைக்கிளையும்,
ஒப்பில்கூட்டமாகிய     பெருந்திணையும்     ஒழித்து   இருவரன்பும்
ஒத்தநிலைமையாகியநடுவண் ஐந்திணைக் கண்ணும் புணர்ப்பும் பிரிதலும்
இரத்தலும் இரங்கலும் ஊடலுமாகிய உரிப்பொருள்  களவு கற்பு என்னும்
இருவகைக்    கைகோளினும்     நிகழுமாதலின்,     அவ்விருவகைக்
கைக்கோளினும் களவாகிய கைகோள் இவ்வோத்தினுள் உணர்த்துதலான்
அவற்றின்  பின்  கூறப்பட்டது;  இது  நடுவணைந்திணைக்கண் நிகழும்
பொருட் பாகுபாடாயின், அகத்திணையியலின் பின்வைக்கற்பாலதுஎனின்,
ஆண்டு  வைக்கக்  கருதின்  "வெட்சிதானே  குறிஞ்சியது  புறனே"
[புறத்திணை - 59]
   என்னும்   மாட்டேறு  பெறாதாம், அதனிடைக்
களவியலும் கற்பியலும் கிடத்தலான் என்க.

மற்றும், அஃது யாங்ஙனம் உணர்த்தினாரோ எனின்,

"காமப் புணர்ச்சியும் இடந்தலைப் படலும்
பாங்கொடு தழாஅலுந் தோழியிற் புணர்வுமென்று
ஆங்கநால் வகையினும் அடைந்த சார்வொடு
மறையென மொழிதன் மறையோர் ஆறே" (செய்யுளியல் 178)

என்பதனான்  இந்நால்வகையும்  இதனுள் உரைக்கப்படுகின்றதென்று
கொள்ளப்படும், காமப்புணர்ச்சியெனினும்,  இயற்கைப்புணர்ச்சியெனினும்,
முன்னுறு  புணர்ச்சி யெனினும், தெய்வப் புணர்ச்சி  யெனினும் ஒக்கும்.
இவையெல்லாம் காரணப்பெயர். அஃதாவது,  ஒத்தார்  இருவர்  தாமே
கூடுங்கூட்டம். இடந்தலைப் பாடாவது  இயற்கைப்  புணர்ச்சி  புணர்ந்த
தலைமகன்  பிற்றை  ஞான்றும்  அவ்விடத்துச்  சென்று எதிர்ப்படுதல்.
பாங்கற் கூட்டமாவது, இப்  புணர்ச்சி  பாங்கற்கு உரைத்து, நீயெமக்குத்
துணையாக வேண்டுமென்ற அவன் குறிவழிச் சென்று தலைமகள் நின்ற
நிலையை யுணர்த்தச் சென்று கூடுதல்,தோழியிற் கூட்டமாவது, இவற்றின்
பின்னர்    இக்கூட்டம்   நீடச்சேறல்  வேண்டித்  தோழியை  இரந்து
பின்னின்று அவள்  வாயிலாகக்  கூடுதல். இவை நான்கும் இம்முறையே
நிகழும் என்று கொள்க.இனி இம்முறை நிகழாது இடையீடு பட்டு வரும்.
அஃதாமாறு,  தலைமகள்  எதிர்ப்பட்டுழி  அன்புடையார் எல்லார்க்கும்
இயற்கைப்   புணர்ச்சி முட்டின்றிக்கூடுதல்   உலகியல்   அன்மையான்
தலைமகளை   யாதானும்  ஓரிடத்து  எதிர்ப்பட்ட  தலைமகன் அவன்
காதற் குறிப்புணர்ந்து நின்று, கூட்டத்திற்கு இடையீடு   உண்டாயுழியும்
ஆண்டுச் சென்ற வேட்கை தணியாது நின்று, முன்னைஞான்று கண்