இளம்பூரணர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   80
Zoom In NormalZoom Out


 

"அதுகொல் தோழி காம நோயே
வதிகுரு குறங்கு மின்னிலைப் புன்னை
உடைதிரைத் திவலை அரும்புந் தீநீர்
மெல்லம் புலம்பன் பிரிந்தெனப்
பல்லிதழ் உண்கண் பாடொல் லாவே."         (குறுந். 5)

எனவும்,

"மணிநிற நெய்தல் இருங்கழிச் சேர்ப்பன்
அணிநலம் உண்டகன்றான் என்றுகொ லெம்போல்
திணிமண லெக்கர்மேல் ஓதம் பெயர்ந்து
துணிமுந்நீர் துஞ்சா தது".            (ஐந்திணையெழு.60)

எனவும்.

"நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல்
அஞ்சுதும் வேபாக் கறிந்து".               (குறள். 1128)

எனவும்,

"கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும்
எழுதேம் கரப்பாக் கறிந்து.                 (குறள்.1127)

எனவும் வரும்.

உறங்காமையும்  உண்ணாமையும் கோலஞ் செய்யாமையும் வருத்தம்
பிறவுஞ்   சொல்லுதல். இவ்வழி நீ  வருந்தாது   நின்மாட்டு   அன்பு
பெரிதுடையான்    எனத்தோழி    ஆற்றுவித்தவழி   ஆற்றாமையாற்
கூறியதற்குச் செய்யுள்:-

"சிறுதினை மேய்ந்த தறுகட் பன்றி
துறுகல் அடுக்கத்துத் துணையொடு வதியும்
இலங்குமலை நாடன் வரூஉம்
மருந்தும் அறியுங்கொல் தோழியவன் விருப்பே".
                                     (ஐங்குறு.262)

என வரும்.

பெற்றவழி மலியினு மென்பதற்குச் செய்யுள் :-

"அம்ம வாழி தோழி பன்மாண்
நுண்மணல் அடைகரை நம்மோ டாடிய
தண்ணந் துறைவன் மறைஇ
அன்னை அருங்கடி வந்துநின் றோனே".     (ஐங்குறு.115)

எனவும்,

முனைவளர் முதல என்னும் அகப்பாட்டினுள்,

" ... ... ... வேட்டோர்க்கு
அமிழ்தத் தன்ன கமழ்தார் மார்பின்
வண்டிடைப் படாஅ முயக்கமுந்
தண்டாக் காதலும் தலைநாள் போன்மே".     (அகம்.332)

எனவும்,

"பெயல்கண் மறைத்தலின் விசும்புகா ணலரே
நீர்பரந் தொழுகலின் நிலங்கா ணலரே
எல்லை சேறலின் இருள்பெரிது பட்டன்று
பல்லோர் துஞ்சும் பானாட் கங்குல்
யாங்குவந் தனையோ ஓங்கல் வெற்ப
வேங்கை கமழும்எம் சிறுகுடி
யாங்கறிந் தனையோ நோகோ யானே".       (குறுந்.355)

எனவும்,

"அம்ம வாழி தோழி நலமிக
நல்ல வாயின அளியமென் தோள்கள்
மல்லல் இருங்கழி மலரும்
மெல்லம் புலம்பன் வந்த வாறே"           (ஐங்குறு.120)

எனவும் வரும்,

வருந் தொழிற் கருமை வாயில் கூறியவழித்  தலைவி  கூறியதற்குச்
செய்யுள்:-

"அருங்கடி அன்னை காவல் நீவிப்
பெருங்கடை இறந்து மன்றம் போகிப்
பகலே பலருங் காண வாய்விட்டு
அகல்வயற் படப்பை அவனூர் வினவிச்
சென்மோ வாழி தோழி பன்னாள்
கருவி வானம் பெய்யா தாயினும்
அருவி ஆர்க்கும் அயந்திகழ் சிலம்பின்
வான்தோய் மாமலை கிழவனைச்
சான்றோய் அல்லை என்றனம் வரற்கே".   (நற்றிணை.365)

என வரும்,

கூறிய வாயில் கொள்ளாக்காலத்துத் தலைவியுரைத்தற்குச் செய்யுள்:-

"கல்வரை யேறிக் கடுவன் கனிவாழை
எல்லுறு போழ்தின் இனிய பழங் கவுட்கொண்
டொல்லென வோடு மலைநாடன் தன்கேண்மை
சொல்லச் சொரியும் வளை."              (கைந்நிலை.7)

என வரும்.

மனைப்பட்டுக் கலங்கிச் சிதைந்தவழித் தோழிக்கு நினைத்தல் சான்ற
அருமறை உயிர்த்தற்குச் செய்யுள்:-

"பலவின் பழம் பெற்ற பைங்கண் கடுவன்
எலவென்று இணைபயிரும் ஏகல்சூழ் வெற்பன்
புலவுங்கொல் தோழி புணர்வறிந் தன்னை
செலவுங் கடிந்தாள் புனத்து".           (திணைமொழி.10)

எனவும்,

"பொழுதும் எல்லின்று பெயலும் ஓவாது
கழுது கண் பனிப்ப வீசும் அதன்றலைப்
புலிப்பல் தாலிப் புதல்வர்ப் புல்லி
அன்னாய் என்னும் அன்னையும் மன்னோ
என்மலைந் தனன்கொல் தானே தன்மலை
ஆரம் நாறு மார்பினன்
மாரி யானையின் வந்து நின்றோனே."          (குறுந்.16)

எனவும் வரும்,

இவை  யெல்லாம்  இயற்கைப்  புணர்ச்சி  புணர்ந்தபின்  நிகழ்வன.
உள்ளப்    புணர்ச்சியான்    உரிமை   பூண்டிருந்தவரும்   இவ்வாறு
கூறப்பெறும்  என்று   கொள்க;   ஆண்டு   மனநிகழ்ச்சி  ஒருப்பட்டு
நிற்றலின்.

உயிராக்காலத்து  உயிர்த்தலும்  உயிர்செல  என்பது  -  இவ்வாறு
கூறாக் காலத்து உயிர் செல்லுமாறு சொல்லுதலும் என்றவாறு.

ஈண்டு,  உயிர்த்தல்   என்பது   சுவாதம்   எனினும்   அமையும்.
இந்நிகழ்ச்சியைத்   தோழிக்கு   நாணத்தால்  உரையாளாயின், நோயட
வருந்தும் என்றவாறு. உதாரணம்:-

"தழையணி அல்குல் தாங்கல் செல்லா
நுழைசிறு நுசுப்பிற் கெவ்வ மாக
அம்மெல் லாகம் நிறைய வீங்கிய
கொம்மை வரிமுலை செப்புடன் எதிரின
யாங்கா குவள்கொல் பூங்குழை என்னும்
அவல நெஞ்சமொடு சாவாக்
கவலை மாக்கட்டிப் பேதை யூரே."           (குறுந்.159)

இது யாங்காகுவ ளென உயிர்செலவு குறித்து நின்றது.

"இன்ன ளாயினள் நன்னுதல் என்றவர்த்
துன்னச் சென்று செப்புநர்ப் பெறினே
நன்றுமன் வாழி தோழிநம் படப்பை
நீர்வார் பைம்புதற் தலித்த
மாரிப் பீரத் தலர்சில கொண்டே"            (குறுந்.98)

என வரும்.

வேற்றுவரைவு... தன்பிழைப்பாகத் தழீஇத் தேறலும்  என்பது-வேற்று
வரைவுவரின் அது மாற்றுதல் முதலாகத் தமர் தற்காத்த காரணப் பக்கம்
ஈறாக   நிகழும்வழித்  தன்குறி  தப்பித் தலைவன் எதிர்ப்படுதலில்லாக்
காலத்து  வந்தவன்   பெயர்ந்த  வறுங்களம்  நோக்கித்  தன்குறையாக
வுடம்பட்டுத் தேறுதலும் என்றவாறு.

ஆண்டுக் கலக்கமின்றித் தேறுமென்பது கூறினாராம்.

அவ்வழி வேற்று வரைவு வரின்  அது  மாற்றுதற்கண்ணும் என்பது
- பிறனொருவன் வரைய வரின் அதனை மாற்றுதற்