இளம்பூரணர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   87
Zoom In NormalZoom Out


 

ந்தங் கண்ணி இவனோ டிவளிடைக்
கரந்த உள்ளமொடு கருதியது பிறிதே
நம்முன் நாணினர் போலத் தம்முள்
மதுமறைந் துண்டோர் மகிழ்ச்சி போல
உள்ளத் துள்ளே மகிழ்ப
சொல்லும் ஆடுபகண் ணினானே".

எனவும்,

குறிப்புணர்ந்து இருவருமுள் வழி அவன் வரவுணர்தல்.

புணர்ந்தபின்    அவன்வயின்  வணங்கற்  கண்ணும்  என்பது  -
மேற்சொல்லப்பட்ட  மூவகையானும்  புணர்ச்சியுண்மை பொருந்தியபின்
தலைவன்கண் தாழநிற்றற்கண்ணும் என்றவாறு.

அது நீ கருதியது முடிக்கற்பாலை எனவும் நீ இவளைப் பாதுகாத்தல்
வேண்டுமெனவும் இவ்வகை கூறுதல்.

உதாரணம்:-

"... ... ... ... ...
அரவின் பொறியும் அணங்கும் புணர்ந்த
உரவுவில் மேலசைத்த கையை ஓராங்கு
நிறைவளை முன்கையென் தோழியை நோக்கிப்
படுகளி பாயும் பசுங்குரல் ஏனல்
கடிதல் மறப்பித்தா யாயின் இனிநீ
நெடிதுள்ளல் ஓம்புதல் வேண்டும் இவனே
... ... ... ... ...
கடுமா கடவுறூஉங் கோல்போல் எனைத்தும்
கொடுமையிலை யாவது அறிந்து மடுப்பில்
வழைவளர் சாரல் வருடை நன்மான்
குழவி வளர்ப்பவர் போலப் பாராட்டி
உழையிற் பிரியிற் பிரியும்
இழையணி அல்குல் என் தோழியது கவினே"    (கலித்.50)

என வரும்.

குறைத்து அவட்படரினும் என்பது-மேல் தலைவன் புணர்ச்சியுண்மை
யறிந்து   தாழநின்ற   தோழி   தானுங்  குறையுற்றுத் தலைவி மாட்டுச்
செல்லுதற் கண்ணுங் கூற்று நிகழும் என்றவாறு.

இக்கிளவி இரந்து பின்னின்ற தலைவன் உள்ளப்புணர்ச்சியுள் வழியும்
குறையுற்று மெய்யுறுபுணர்ச்சி  வேண்டித்  தலைவி  மாட்டுச்  செல்லுங்
காலத்தும் ஒக்கும்.

உதாரணம்:-

"வளைஅணி முன்கை வால்எயிற் றின்னகை
இளையர் ஆடுந் தழையவிழ் கானற்
குறுந்துறை வினவி நின்ற

நெடுந்தேர் அண்ணலைக் கண்டிகும் யாமே".  (ஐங்குறு.198)

என வரும்.

மறைந்து  அவள்  அருகத்  தன்னொடும்  அவளொடும்  முன்னம்
முன்தளைஇப்   பின்னிலை   நிகழும் பல்வேறு மருங்கினும் என்பது -
மேல் தலைவன் மாட்டுத் தோழி குறைநயப்பிக்கச் சென்ற வழித் தோழி
சொல்லும் குறிப்பு மொழிக்கு அவள் மறைந்து அரியளாகத் தன்னொடும்
அவளொடும் குறிப்பினை   முன்னர்த்   தடுத்துக்கொண்டு   வழிபட்டு
முயலும்   பலவேறு   பக்கத்தின்   கண்ணும் தோழி கூற்று   நிகழும்
என்றவாறு.

மறைத்தலாவது    -  தன்    மனத்து  நிகழ்ச்சியை    ஒளித்தல்.
அருகுதலாவது    -    இசைவிலாதாரைப்போல    நிற்றல்.   முன்ன
முன்தளைதலாவது   கூற்றினானன்றிக்   குறிப்பினானுணர்தல்.   முதன்
முன்றளைஇ என்று  பாடமாயின்,   மனத்தினானும்    மொழியினானும்
உடம்பினானும் ஒருங்கே  அளவி   என்றுமாம்.   பின்னிலை  நிகழும்
பல்வேறு மருங்காவது  வழிபாடு கொடுவருங் கூற்றுவேறுபாடு. எனவே
தலைவிக்குத் தழையும் கண்ணியும்   கொண்டு  ஒருவன் நம்புனத்தயல்
வாராநின்றான் எனவும், அவன் என்மாட்டு ஒரு குறையுடையன்போலும்
எனவும், அருளுவார்க்கு இஃது இடமெனவும்,  அவன்  குறைமறுப்பின்
மடலேறுவல்   எனக்   கூறிப்  போந்தான் . பின்பு  வரக்கண்டிலேன் எனவும் ,இந் நிகரன கூறுதல். அவை வருமாறு;

"புனைபூந் தழைஅல்குல் பொன் அன்னாய் சாரல்
தினைகாத் திருந்தேம்யா மாக - வினைவாய்த்து
மாவினவு வார்போல வந்தவர் நம்மாட்டுத்
தாம்வினவல் உற்றதொன் றுண்டு ".    (ஐந்திணையைம்.14)

எனவும்,

"நெய்யொடு மயக்கிய உழுத்து நூற்றன்ன
வயலையஞ் சிலம்பின் தலையது
செயலையம் பகைத்தழை வாடும் அன்னாய் ".  (ஐங்குறு.211)

எனவும்,

"இலை சூழ்செங் காந்தள் எரிவாய் மிகையவிழ்த்த ஈர்ந்தண்
                                          வாடை
கொலைவேல் நெடுங்கட் கொடிச்சி கதுப்புளருங் குன்ற
                                          நாடன்|
உலைபடு வெந்நோய் உழக்குமால் அந்தோ
முலையிடை நேர்பவர் நேரும் இடனிது மொய்குழலே"

எனவும்,

"புணர்துணையோ டாடும் பொறியலவன் நோக்கி
இணர்ததையும் பூங்கானல் என்னையும் நோக்கி
உணர்வொழியப் போன ஒலிதிரை நீர்ச் சேர்ப்பன்

வணர்சுரியைம் பாலாய் வண்ணம் உணரேனால்"
                                  (சிலப்.கானல். 31)

எனவும் ,

"தன்குறையீ தென்னான் தழைகொணருந் தண்சிலம்பன்
நின்குறை யென்னும் நினைப்பனனாய்ப் பொன்குறையும்
நாள்வேங்கை நீழலும் நண்ணான் எவன்கொலோ

கோள்வேங்கை அன்னான் குறிப்பு".      (திணைமாலை.31)

எனவும்,

"ஒருநாள் வாரலன் இருநாள் வாரலன்
பன்னாள் வந்து பணிமொழி பயிற்றி
நன்னர் நெஞ்சம் நெகிழ்ந்த பின்றை
வரைமுதிர் தேனிற் போகி யோனே
ஆசாகு எந்தை யாண்டுளன் கொல்லோ
வேறுபுல னல்நாட்டுப் பெய்த

ஏறுடை மழையிற் கலிழுமென் நெஞ்சே". (குறுந்தொகை.176)

எனவும்,

"மாயோன் அன்ன மால்வரைக் கவா அன்
வாலியோன் அன்ன வயங்குவெள் அருவி
அம்மலைக் கிழவன் நம்நயந் தென்றும்
வருந்தினன் என்பதோர் வாய்ச்சொல் தேறாய்
நீயுங் கண்டு நுமரொடும் எண்ணி
அறிவறிந் தளவல் வேண்டு மறுதரற்கு
அரிய வாழி தோழி பெரியோர்
நாடி நட்பின் அல்லது

நட்டு நாடார்தம் ஒட்டியோர் திறத்தே".     (நற்றிணை.32)

எனவும் வரும்,

நன்னயம் பெற்றுழி நயம்புரி யிடத்தினும் என்பது -  தலைவி குறை
நயந்தமை பெற்றுவழி அத் தலைவி நயம்பொருந்தும் இடத்தினுங்