இளம்பூரணர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   93
Zoom In NormalZoom Out


 

அன்னாய் வாழிவேண் டன்னை என்தோழி
நனிநா ணுடையள் எனினும் அஞ்சும்
ஒலிவெள்ளருவி யோங்குமலை நாடன்
மலர்ந்த மார்பிற் பாயல்
தவநனி வெய்ய நோகோ யானே."          (ஐங்குறு.215)

இது, தலைவி வேட்கை கூறியது.

கூறுதலாவது - தலைவியைத்    தலைவற்குக்    கொடுக்கவேண்டு
மென்பதுபடக் கூறுதல்.

உதாரணம்:-

"வாடாத சான்றோர் வரவெதிர் கொண்டிராய்க்
கோடாது நீர்கொடுப்பின் அல்லது - வாடா
எழிலும் முலையும் இரண்டிற்கு முந்நீர்ப்
பொழிலும் விலையாமோ போந்து".      (திணைமாலை.15)

என வரும்.

"கறிவளர் சிலம்பிற் கடவுட் பேணி
அறியா வேலன் வெறியெனக் கூறும்
அதுமனங் கொள்குவை அன்னையிவள்
புதுமலர் மழைக்கண் புலம்பிய நோய்க்கே."  (ஐங்குறு.243)

எனவும் வரும்,

உசாவுதல் என்பது  - வெறியாட்டுங்   கழங்கும்   இட்டுரைத்துழி
வேலனோடாதல் பிறரோடாதல் தோழி உசாவுதல்.

"முருகயர்ந்து வந்தமுதுவாய் வேல
சினவல் ஓம்புமதி வினவுவ துடையேன்
பல்வே றுருவிற் சில்லவிழ் மடையொடு
சிறுமறி தோன்றிய வன்று நுதல் நீவி
வணங்கினை கொடுத்தி யாயின் அணங்கிய
விண்டேர் மாமலைச் சிலம்பன்
தண்டா ரகலமும் உண்ணுமோ பலியே".       (குறுந்.362)

இது, வேலனொடு உசாவுதல்.

"இன்றியாண் டையனோ தோழி குன்றத்துப்
பழங்குழி அகழ்ந்த கானவன் கிழங்கினோடு
உண்ணமை மதுத்துளி பெறூஉ நாடன்
அறிவுகாழ்க் கொள்ளும் அளவைச் செறிதொடி
எம்மில் வருகுவை நீயெனப்
பொம்மல் ஓதி நீவி யோனே."              (குறுந்.379)

இது, செவிலி கேட்பத் தலைவியொடு தோழி உசாவியது. பிறவுமன்ன.

ஏதீடு தலைப்பாடு என்பது - யாதானுமோர் ஏதுவை  இடையிட்டுக்
கொண்டு தலைப்பட்டமை கூறுதல்.

உதாரணம்;-

"காமர் கடும்புனல் கலந்தெம்மோ டாடுவாள்
... ... ... ... ... ... ... ...
அருமழை தரல்வேண்டில் தருகிற்கும் பெருமையளே".
                                       (கலித்.39)

இது, புனலிடை உதவினானெனத் தலைப்பாடு கூறியது.

"கள்ளி சுனைநீலஞ் சோபா லிகைசெயலை
அள்ளி அளகத்தின் மேலாய்ந்து - தெள்ளி
இதணாற் கடியோடுங்கா ஈர்ங்கடா யானை
உதணாற் கடிந்தான் உளன்"       (திணைமாலை. நூற்.2)

இது, களிற்றிடை உதவினானெனத் தலைப்பாடு கூறியது.

"அன்னாய் வாழிவேண் டன்னை என்னை
தானு மலைந்தான் எமக்குந்தழை யாயின
பொன்வீ மணிஅரும் பினவே
என்ன மரங்கொலவர் சார லவ்வே."       (ஐங்குறு. 201)

இது, தழையும் கண்ணியுந் தந்தானென்பதுபடக் கூறியது.

உண்மை செப்பும் கிளவி யாவது - பட்டாங்கு கூறுதல்.

"அல்கண் மழை பொழிந்த அகன்கண் அருவி
ஆடுகழை அடுக்கத் திழிதரு நாடன்
பெருவரை அன்ன திருவிறல் வியன் மார்பு
முயங்காது கழிந்த நாளிவள்
மயங்கிதழ் மழைக்கண் கலிழும் அன்னாய்."  (ஐங்குறு.220)

இவ்வகை யெல்லாம் தத்தங் குடிமைக் கேற்ற வழிக் கொள்க.

வரைவுடன்  பட்டோர்க்  கடாவல்  வேண்டியும்  என்பது -  தமர்
வரைவுடன் பட்டமையைத் தலைவற்கு உரைக்க வேண்டியும் என்றவாறு.

உதாரணம் வந்தவழிக் காண்க.

ஆங்கதன்    றன்மையின்    வன்புறை   என்பது  -  அவ்வாறு
வரைவுடம்பட்ட  தன்மையினால்  தலைவியை  வற்புறுத்தற் கண்ணும்
என்றவாறு.

"கூர்முள் முண்டகக் கூர்ம்பனி மாமலர்
நூலற முத்திற் காலொடு பாறித்
துறைதொறும் பரக்குந் தூமணற் சேர்ப்பனை
யானுங் காதலென் யாயும் நனி வெய்யன்
எந்தையுங் கொடீஇயர் வேண்டும்
அம்பல் ஊரும் அவனொடு மொழிமே."        (குறுந்.51)

"அம்ம வாழி தோழி நம்மொடு
சிறுதினைக் காவ லனாகிப் பெரிதுநின்
மென்தோள் நெகிழவும் திருநுதல் பசப்பவும்
பொன்போல் விறற்கவின் தொலைத்து
குன்ற நாடற் கயர்ந்தனர் மணனே"         (ஐங்குறு.230)

என வரும்.

பாங்குற வந்த நாலெட்டு  வகையும் என்பது  -  பகுதிப்பட  வந்த
முப்பத்திரண்டு வகைப்பட்ட பொருண்மையும் என்றவாறு.

அவையாவன  மேற்  சொல்லப்பட்ட  முன்னுற  வுணர்தல்  வகை
குறையுற வுணர்தற்கண்    பெருமையிற்    பெயர்த்தல்,   உலகுரைத்
தொழித்தல்,   அருமையினகற்றல்,   பின்   வாவென்றல்,  பேதைமை
யூட்டல், முன்னுறு புணர்ச்சி, முறைதிறுத் துரைத்தல். அஞ்சியச்சுறுத்தல்.
உரைத்துழிக் கூட்டம்  எனச்   சொல்லப்  பட்ட  எண்வகை  மாயஞ்
செப்பி    வந்த   கிழவனைப்  பொறுத்த   காரணம்   குறித்தலாகிய
இருவருமுள்வழி   அவன்வர வுணர்தல், புணர்ந்தபின்   அவன்வயின்
வணங்கல்    குறைநயப்பச்   சேறல், குறைநயப்புவகை,    நயந்தமை
கூறல்,  அலராமென்றல்,   புணர்ச்சி  வேண்டியவழிக்  கூறல்,  பிரிவு
வேண்டியவழிக் கூறல், வேளாண்  பெருநெறி  வேண்டிக்கூறல், அல்ல
குறிப்பட்டவழிக்  கூறல்,  ஓம்படைகூறல்,  இயற்பழித்து  வற்புறுத்தல்,
ஆறின்னாமை கூறல், காப்பு மிகுதி கூறல், காதல் மிகுதி கூறல், அவன்
வயிற்  றோன்றிய  கிளவி,  ஐயச்செய்கை  தாய்க்கெதிர் மறுத்தல், குறி
பார்த்தல், விலக்கல், வெறி