இளம்பூரணர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   96
Zoom In NormalZoom Out


 

அறமாக  லின்மையானே குறியிடம் கூறுதல் தலைமகள்தாம்; அது தான்
சேறற் குரிய இடமாதலான் என்றவாறு.

எனவே, இத்துணைக்கூறின் மிகையன்று என்றவாறாம்.        (30)

119. தோழியின் முடியும் இடனுமார் உண்டே.

இது, தோழியிற் கூட்டத்திற் காயதொரு சிறப்புவிதி   உணர்த்துதல்
நுதலிற்று.

மேல் `காமக்கூட்டந்  தனிமையிற் பொலிதலிற்றாமே தூதுவ ராகலும்
உரித்' தெனக்  கூறிப்போந்தார்.  அவ்வாறன்றி  மேற்  சொல்லப்பட்ட
இயற்கைப் புணர்ச்சியானது  தோழியின் முடியுமிடத்து ஓரிடத்து உண்டு
என்றவாறு.   "அன்பொடு புணர்ந்த  வைந்திணை"   (இறையனார்
களவியல்-1)
என்றதனால் யாண்டும்  உள்ளப்  புணர்ச்சியான் வேட்கை
மீதூர்ந்த  வழியே  தோழியின்  முடியப்  பெறுவது  என்று  கொள்க.
அல்லாக்காற் பெருந்திணைப்பாற்படும்.

120. முந்நா ளல்லது துணையின்று கழியாது
அந்நா ளகத்தும் அதுவரை வின்றே.

இது, பாங்கற் கூட்டம் நிகழுமிடம் உணர்த்துதல் நுதலிற்று.

மேல்,   தோழியிற் கூட்டத்தின் விகற்பங் கூறினாராகலின், ஈண்டுத்
துணை யென்றது பாங்கன் ஆயிற்று. மூன்று நாளல்லது  துணையின்றிக்
களவிற் புணர்ச்சி  செல்லாது;  அந்  நாளகத்தும் துணையை  நீக்கவும்
படாது என்றவாறு.

எனவே,  எதிர்ப்பட்ட தலைவன்  இயற்கைப் புணர்ச்சி புணர்வதன்
முன் பாங்கற்கு உணர்த்தவும் பெறும் என்றவாறு.

உதாரணம் மேற்காட்டப்பட்டது.                          (32)

121. பன்னூறு வகையினுந் தன்வயின் வரூஉம்
நன்னய மருங்கின் நாட்டம் வேண்டலில்
துணைச்சுட்டுக் கிளவி கிழவிய தாகுந்
துணையோர் கரும மாத லான.

இது தலைவிக்கு உரியதோ ரியல்பு உணர்த்துதல் நுதலிற்று.

பன்னூறு  வகையினும்  என்பது - பலவகையானும் என்றவாறு. நூறு,
பத்து, ஆயிரம் என்பன பல் பொருட்பெயர்.

தன்வயின்வரூஉ...மாதலான  என்பது -  தன்னிடத்து  வரும்  நல்ல
நயப்பாட்டு     பக்கத்தினை     ஆராய்தல்     தலைவன்   மாட்டு
வேண்டுமாதலால்,  துணையைச்   சுட்டிக்   கூறலுறும்   சொல்  தலை
மகளதாகும்;  தான்   கூறும்  கருமம்  துணையோராற்   செய்யப்படும்
கருமமாதலான் என்றவாறு.

எனவே, தலைமகன் களவுகாலத்துப் பாங்கற்கு உற்றதுரைத்த  பின்பு
பாங்கனைச் சுட்டி யாது செய்வாமெனக் கூறப் பெறும் என்றவாறாயிற்று.
                                                      (33)

122. ஆய்பெருஞ் சிறப்பின் அருமறை கிளத்தலின்
தாயெனப் படுவாள் செவிலி யாகும்.

இது, செவிலிக்கு உரியதொரு சிறப்பு உணர்த்துதல் நுதலிற்று.

நல்ல  பெரிய  சிறப்பினையுடைய  அறிதற்கரிய  மறைப்  பொருள்
யாவற்றையுங்  கூறும் கடப்பாடுடையளாதலின்   தாய்   எனப்படுவாள்
செவிலியாகும் என்றவாறு.

நற்றாய்  இத்துணைச் சிறப்பிலள் என்றவாறு. இதனாற் பயன் களவுக்
காலத்தையச் சொ...செவிலித்தாய்க்குங்  கைத்தாய்க்கும்  பொதுவாயினும்
தாயென்று வேண்டப்படுவாள் செவிலி என்றறிவித்தல்.           (34)

123. தோழி தானே செவிலி மகளே.

இது, தோழிக்கு உரியதொரு சிறப்பு உணர்த்துதல் நுதலிற்று.

களவுக்      காலத்தும்      இன்றியமையாளாகத்    தலைவியால்
வேண்டப்பட்டாள் செவிலிமகள் என்றவாறு.

எனவே, பயின்றா ரெல்லாருந்  தோழியராகார். அருமறை  கிளக்கப்
படுதலான்  உடன்  முலையுண்டு  வளர்ந்த  செவிலி  மகளே  தோழி
எனப்படுவாள்  என்றவாறு.  அருமறை  கிளத்தல் என்பதனை  யீண்டு
வருவிக்க.                                              (35)

124. சூழ்தலும் உசாத்துணை நிலைமையிற் பொலிமே.

இது, தோழிக்கு உரியதோர் இயல்பு உணர்த்துதல் நுதலிற்று.

மேற்சொல்லப்பட்ட தோழி  தான்  சூழ்தற்கும் தலைவி  சூழ்ச்சிக்கு
உசாத்துணையாகியும் வரும் நிலைமையாற் பொலிவு பெறும் என்றவாறு.

எனவே,  செவிலிமகள்  என்னுந்  துணையாற்  பொலிவு  பெறாள்;
என்றும்    தோழியாவாள்   செவிலி    மகளாதலேயன்றிச்   சூழவும்
உசாத்துணைகயாவும் வல்லள் ஆதல்வேண்டும் என்றவாறு.

செய்யுள் மேற்காட்டப்பட்டன.                           (36)

125. குறையுற உணர்தல் முன்னுற உணர்தல்
இருவரும் உள்வழி அவன்வர வுணர்தலென
மதியுடம் படுதல் ஒருமூ வகைத்தே.

இது,  தலைவன்  புணர்ச்சி    யுண்மை  தோழி   அறியுந்  திறன்
பாகுபடுமாறு உணர்த்துதல் நுதலிற்று.

தலைவன்  குறையுற  வுணர்தலும் அவன்  குறையுறாவழித் தலைவி
குறிப்புக்கண்டு  உணர்தலும்   தானும்   தலைவியுங்   கூடியிருந்துழித்
தலைவன் வந்தமைகண்டு  உணர்தலும்   என   மூவகைத்துத்  தோழி
அறிவுடம்படுதற்கண்ண என்றவாறு.

மதியுடம்படுதல்  எனினும்  புணர்ச்சியுணர்தல்   எனினும்  ஒக்கும்,
இம்மூன்றினும் ஒன்று கண்டுழி அவரவர்  குறிப்பினாற் புணர்ச்சியுணரும்
என்றவாறு.  `குறையுணர்தல்'  முன்வைத்தார்   நன்கு   புலப்படுதலின்
`முன்னுறவுணர்தல்' அதன்பின் வைத்தார்,  தலைவி  வேறுபாடு  கண்டு
பண்டையிற்போலாள் என்னும் நிகழ்ச்சியான் முற்றத் துணிவின்மையின்,