இளம்பூரணர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   102
Zoom In NormalZoom Out


 

வந்தவழிக் கண்டு கொள்க.

ஒழுக்கத்துக் களவினுள்  நிகழ்ந்த  அருமையைப்  புலம்பி  அலமா
லுள்ளமோ  டளவியவிடத்தும் என்பது - ஒழுக்கத்தினுங் களவுக்காலத்து
நிகழ்ந்த  அருமையைத் தனித்துச்  சுழன்ற  உள்ளத்தோடே  உசாவிய
விடத்தும் என்றவாறு.

உதாரணம் வந்தவழிக் காண்க.

அந்தரத்   தெழுதிய  வெழுத்தின்  மான வந்த குற்றம் வழி  கெட
ஒழுகலும் என்பது - களவுக்காலத்தொழுகிய  ஒழுக்கக்  குறைபாட்டான்
நிகழ்ந்த   குற்றத்தை   ஆகாயத்    தெழுத்துப்   போல   வழிகெட
ஒழுகுதற்கண்ணும் என்றவாறு.

உதாரணம் வந்தவழிக் காண்க.

அழியல்  அஞ்சலென்   றாயிரு  பொருளினுந்   தானவட்பிழைத்த
பருவத்தானும்       என்பது    -    அழியல்,     அஞ்சல்    என
இயற்கைப்புணர்ச்சிக்கட்   கூறிய   அவ்விரு   பொருளைப்  பிழைத்த
காலத்தினும் தலைவன்கண் கூற்று நிகழும் என்றவாறு.

அஃதாவது, புறப்பெண்டிர் மாட்டுப் பிரிதல்.

"நகுகம் வாராய் பாண பகுவாய்
அரிபெய் கிண்கிணி ஆர்ப்பத் தெருவில்
தேர்நடை பயிற்றுந் தேமொழிப் புதல்வன்
பூநாறு செவ்வாய் சிதைத்த சாந்தமொடு
காம நெஞ்சந் துரப்ப யாந்தம்
முயங்கல் விருப்பொடு குறுகினேம் ஆகப்
பிறைவனப் புற்ற மாசறு திருநுதல்
நாறிருங் கதுப்பினெங் காதலி வேறுணர்ந்து
வெரூஉமான் பிணையின் ஒரீஇ
யாரை யோவென்று இகந்துநின் றதுவே"    (நற்றிணை.250)

என வரும்.

நோன்மையும்  பெருமையும்  மெய்கொள  வருளிப் பன்னல் சான்ற
வாயிலொடு  பொருந்தித்  தன்னினாகிய  தகுதிக்கண்ணும்  என்பது  -
பொறைமையும்   பெருமையும்   மெய்யெனக்   கொள்ளுமாறு  அருளி
ஆராய்தல் அமைந்த  வாயிலொடு  பொருந்தித் தலைவன்   தன்னான்
ஆகிய தகுதிக்கண்ணும் கூற்று நிகழும் என்றவாறு.

அருளிப் பொருந்திக்  கூறும் எனக்  கூட்டுக.  எனவே  தலைமகன்
என்பதூஉந் தலைமகள் என்பதூஉம்  எஞ்சி  நின்றன.  கூற்று  என்றது
அதிகாரத்தான் வந்தது.  அஃதாவது  பொறுத்தல்  வேண்டும்  எனவும்
சிறுமை செய்தல்  குற்றம்  எனவும்  கூறுதலும்,  தலைமகள்  தன்னால்
வந்ததனை என்னால் வந்தது  எனவும்  இவ்வாறு   கூறுதல்.  பன்னல்
சான்ற வாயிலாவது. நீ  என் செய்தனை? இவள் வெகுடற்குக்  காரணம்
என்னை? என ஆராய்தலிற் பொருந்திய தோழி என்க. பொருந்தலாவது
வேறு படாது உடம்படுதல். அவை வருமாறு:-

"யாரினுங்காதலம் என்றேனா ஊடினாள்
யாரினும் யாரினும் என்று."                (குறள்.1314)

"தும்முச் செறுப்ப அழுதாள் நுமர்உள்ளல்
எம்மை மறைத்திரோ என்று"               (குறள்.1318)

"இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்
கண்ணிறை நீர்கொண் டனள்"              (குறள்.1315)

"தன்னை யுணர்த்தினுங் காயும் பிறர்க்குநீர்
இந்நீரர் ஆகுதிர் என்று."                 (குறள்.1319)

"கோட்டுப்பூச் சூடினுங் காயும் ஒருத்தியைக்
காட்டிய சூடினீர் என்று."                  (குறள்.1313)

என வரும்.

பிறவும் அன்ன.

புதல்வற்   பயந்த   புனிறுதீர்   பொழுதின்   நெய்யணி  மயக்கம்
புரிந்தோள்  நோக்கி   ஐயர்   பாங்கினும்  அமரர்ச்  சுட்டியுஞ்  செய்
பெருஞ்  சிறப்பொடு  சேர்தற்கண்ணும்  என்பது - புதல்வனைப் பயந்த
ஈன்றணிமை நீங்கினபொழுதின்கண்  நெய்யணி  மயக்கம் புரிந்தவளைக்
குறித்து முனிவர் மாட்டும்  அமரரைக் குறித்தும் செய்யாநிற்கும் பெரிய
சிறப்பொடு சேர்தகண்ணும் கூற்று நிகழும் என்றவாறு,

நெய்யணி  மயக்கமாவது  வாலாமை  நீங்கி நெய்யணிதல் நோக்கிச்
சேர்தல் எனக் கூட்டுக.

"வாராய் பாண நகுகம் நேரிழை
கடும்புடைக் கடுஞ்சூல் நங்குடிக் குதவி
நெய்யோ டிமைக்கும் ஐயவித் திரள்காழ்
விளங்குநகர் விளங்கக் கிடந்தோட் குறுகிப்
புதல்வனை யீன்றெனப் பெயர்பெயர்த்து அவ்வரித்
திகலை அல்குல் முதுபெண் டாகித்
துஞ்சுதி யோமெல் அஞ்சில ஓதியெனப்
பன்மாண் அகட்டிற் குவளை ஒற்றி
உள்ளினென் உறையும் எற்கண்டு மெல்ல
முகைநாள் முறுவல் தோற்றித்
தகைமலர் உண்கண் புடைத்துவந் ததுவே"  (நற்றிணை.370)

என வரும்.

பயங்கெழு  துணைமணைப் புல்லிப் புல்லாது  உயங்குவனள் கிடந்த
கிழத்தியைக்  குறுகிய   அல்கல்   முன்னிய   நிறைவழி   பொழுதின்
மெல்லென் சீறடி  புல்லிய  இரவினும் என்பது - தலைவன் பரத்தையிற்
பிரிந்துழி   ஊடற் கருத்தினளாய்ப்  பயங்  கெழுதுணை  அணையைப்
பல்லிப் புல்லாது  வருந்திக் கிடந்த தலைவியைக்  கிட்டித் தங்குதலைக்
குறித்த  நிறையழிபொழுதில்   தலைவியது   மெல்லென்ற   சீறடியைப்
புல்லிய இரத்தற்கண்ணும் தலைவன் கூற்று நிகழும் என்றவாறு.

உதாரணம்

"ஊடலின் உண்டாங்கோர் துன்பம் புணர்வது
நீடுவ தன்றுகொல் என்று."                 [குறள்.1307]

"ஊடுக மன்னோ ஒளியிழை யாம்இரப்ப
நீடுக மன்னோ இரா."                     [குறள்.1329]

"ஊடலில் தோன்றுஞ் சிறுதுனி நல்லளி
வாடினும் பாடு பெறும்."                   [குறள்.1322]

உறலருங்குரைமையி  னூடன்  மிகுத்தோளைப்  பிறபிற பெண்டிரிற்
பெயர்த்தற்கண்ணும் என்பது - ஊடல் மிகுத்தோளை