இளம்பூரணர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   106
Zoom In NormalZoom Out


 

தனான்.    இவ்விடங்களின்    வரும்   பொருள்   வேறுபாடுகட்கும்
இவையே இடமாகக் கொள்க.

145. அவனறி வாற்ற அறியும் ஆகலின்
ஏற்றற் கண்ணும் நிறுத்தற் கண்ணும்
உரிமை கொடுத்த கிழவோன் பாங்கின்
பெருமையில் திரியா வன்பின் கண்ணும்
கிழவனை மகடூஉப் புலம்புபெரி தாகலின்
அலமரல் பெருகிய காமத்து மிகுதியும்
இன்பமும் இடும்பையும் ஆகிய இடத்துங்
கயந்தலை தோன்றிய காமர் நெய்யணி
நயந்த கிழவனை நெஞ்சு புண்ணுறீஇ
நளினி னீக்கிய விளிவரு நிலையும்
புகன்ற உள்ளமொடு புதுவோர் சாயற்கு
அகன்ற கிழவனைப் புலம்புநனி காட்டி
இயன்ற நெஞ்சந் தலைப்பெயர்த் தருக்கி
எதிர்பெய்து மறுத்த ஈரத்து மருங்கினுந்
தங்கிய ஒழுக்கத்துக் கிழவனை வணங்கி
எங்கையர்க் குரையென இரத்தற் கண்ணுஞ்
செல்லாக் காலைச் செல்கென விடுத்தலும்
காமக் கிழத்தி தன்மகத் தழீஇ
ஏமுறு விளையாட் டிறுதிக் கண்ணுஞ்
சிறந்த செய்கை அவ்வழித் தோன்றி
அறம்புரி நெஞ்சமொடு தன்வர வறியாமைப்
புறஞ்செய்து பெயர்த்தல் வேண்டிடத் தானுந்
தந்தையர் ஒப்பர் மக்களென் பதனால்
அந்தமில் சிறப்பின் மகப்பழித்து நெருங்கினுங்
கொடியோர் கொடுமை சுடுமென ஒடியாது
நல்லிசை நயந்தோர் சொல்லோடு தொகைஇப்
பகுதியின் நீங்கிய தகுதிக் கண்ணுங்
கொடுமை ஒழுக்கங் கோடல் வேண்டி
அடிமேல் வீழ்ந்த கிழவனை நெருங்கிக்
காதல் எங்கையர் காணின் நன்றென
மாதர் சான்ற வகையின் கண்ணுந்
தாயர் கண்ணிய நல்லணிப் புதல்வனை
மாயப் பரத்தை உள்ளிய வழியுந்
தன்வயின் சிறப்பினு மவன்வயின் பிரிப்பினும்
இன்னாத் தொல்சூள் எடுத்தற் கண்ணுங்
காமக் கிழத்தி நலம்பா ராட்டிய
தீமையின் முடிக்கும் பொருளின் கண்ணும்
கொடுமை யொழுக்கத்துத் தோழிக் குரியவை
வடுவறு சிறப்பிற் கற்பில் திரியாமைக்
காய்தலும் உவத்தலும் பிரித்தலும் பெட்டலும்
ஆவயின் வரூஉம் பல்வேறு நிலையினும்
வாயிலின் வரூஉம் வகையோடு தொகைஇக்
கிழவோள் செப்பல் கிழவ தென்ப.

என்-எனின்,   கற்பின்கண்    தலைவி   கூற்று   நிகழும்   இடம்
தொகுத்துணர்த்துதல் நுதலிற்று.

ஏற்றல்  முதலாக  வாயிலின்  வரூஉம்  வகையொடு கூடத் தலைவி
கூறல் உரியதாகும் என்றவாறு.

அவனறி   வாற்ற  அறிவு  மாகலின்  ஏற்றற்  கண்ணும் என்பது -
தலைவனது  நினைவைத்   தலைவி  மிக   அறியுமாகலின்   அவளை
யுயிர்த்துக் கூறுதற்கண்ணும் தலைவி கூற்று நிகழும்.

உதாரணம்

"நின்ற சொல்லர் நீடுதோன் றினியர்
என்றும் என்தோள் பிரிபறி யலரே
தாமரைத் தண்தா தூதி மீமிசைச்
சாந்தின் தொடுத்த தீந்தேன் போலப்
புரைய மன்ற புரையோர் கேண்மை
நீரின் றமையா உலகம் போலத்
தம்மின் றமையா நந்நயந் தருளி
நறுநுதல் பசத்த லஞ்சிச்
சிறுமை உறுபவோ செய்பறி யலரே."         (நற்றிணை.1)

என வரும்.

நிறுத்தற்  கண்ணும்  என்பது -  தலைவனது  பண்பினைத்  தோழி
கூறியவாற்றால் தான் நிறுத்துக் கூறுதற்கண்ணும் என்றவாறு.

உதாரணம்

"முடவுமுதிர் பலவின் குடமருள் பெரும்பழம்
பல்கினைத் தலைவன் கல்லாக் கடுவன்
பாடிமி ழருவிப் பாறை மருங்கின்
ஆடுமயில் முன்ன தாகக் கோடியர்
விழவுகொள் மூதூர் விறலி பின்றை
முழவன் போல அகப்படத் தழீஇ
இன்துணைப் பையிருங் குன்ற நாடன்
குடியன் குடையன் கூடுநர்ப் பிரியலன்
கெடுநா மொழியலன் அன்பினன் எனநீ
வல்ல கூறி வாய்வதிற் புணர்த்தோய்
நல்லை காணில் காதலந் தோழி
கடும்பரிப் புரவி நெடுந்தேர் அஞ்சி
நல்லிசை நிறுத்த நயவரும் பனுவல்
தொல்லிசை நிறீஇய உரைசால் பாண்மகன்
எண்ணுமுறை நிறுத்த பண்ணின் உள்ளும்
புதுவது புனைந்த திறத்தினும்
வதுவை நாளினும் இனியனால் எமக்கே."      (அகம்.352)

என வரும்.

உரிமை  கொடுத்த   கிழவோன்   பாங்கின்  பெருமையில்  திரியா
அன்பின்   கண்ணும்  என்பது - தலைவிக்கு  உரிமையைக்  கொடுத்த
கிழவோன்மாட்டுப்  பெருமையிற்  றிரியா  அன்பின்  கண்ணும்  கூற்று
நிகழும் என்றவாறு.

உதாரணம்

"நீரினும் ஆரள வின்றே சாரற்
கருங்கோற் குறிஞ்சிப்பூக் கொண்டு
பெருந்தே னிழைக்கும் நாடனொடு நட்பே".      (குறுந்.3)

என வரும்.

கிழவனை   மகடூஉப்  புலம்பு  பெரிதாகலின்  அலமரல்  பெருகிய
காமத்து    மிகுதியும்     என்பது   -     தலைவனைத்    தலைவி
நீங்கித்  தனிமையுறுதல்  பெரிதாகலின்  ஆண்டு   அலமரல் பெருகிய
காமத்தின் மிகுதியின் கண்ணும் கூற்று நிகழும் என்றவாறு.

உதாரணம்

"நீர்நீ டாடிற் கண்ணும் சிவக்கும்
ஆர்ந்தோர் வாயில் தேனும் புளிக்கும்
தணந்தனி ராயின் எம் இல்லுய்த்துக் கொடுமோ
அந்தண் பொய்கை எந்தை எம்மூர்க்
கடும்பாம்பு வழங்குந் தெருவில்