வருசொல் ஆயிரு கிளவியும்
தன்மை முன்னிலை ஆயீ ரிடத்த.
இச்சூத்திரம் என்னுதலிற்றோவெனின், எய்தியது
விலக்குதல்
நுதலிற்று.
உரை:
தரும், வரும், என்னுஞ் சொல் தன்மைக்கும், முன்னிலைக்கும் உரியவாம் ; படர்க்கைக்கு ஆகா என்றவாறு.
வரலாறு:
எனக்குத் தருங்காணம், எனக்கு வருங்காணம்; நினக்குத் தருங்காணம், நினக்கு வருங்காணம் என வரும். (29)
30,
ஏனை யிரண்டும் ஏனை யிடத்த.
இச் சூத்திரம் என்னுதலிற்றோவெனின், இதற்கு மேல் எய்தியது விலக்குதல் நுதலிற்று.
உரை:
செல்லும், கொடுக்கும் என ஒழிந்து நின்ற இரண்டும் படர்க்கைக்காம்; தன்மைக்கும், முன்னிலைக்கும் ஆகா என்றவாறு.
வரலாறு:
அவற்குச் செல்லுங்காணம் அவற்குக் கொடுக்குங்காணம் என வரும்.
இனிச், செலவும் கொடையும் தரவும் வரவும்
என்று சூத்திரம் செய்யற்பாலான் எற்றுக்கு, செல்லுங் காணம், கொடுங்குங் காணம் என்பன இரண்டும் படர்க்கைக்குரிய ; தரும், வரும் என்பன இரண்டுந் தன்மைக்கும் முன்னிலைக்கும் உரிய ; ஆகலான், அவ்வாறு கூறாது மயக்கங் கூறியவதனான், செல்லும் என்னும் சொல்லாற் சொல்லப்படுவதனை வரும் என்னும் சொல்லானும் சொல்லுப ; கொடுக்கும் என்னுஞ் சொல்லாற் சொல்லப்படுவதனைத் தரும் என்னும் சொல்லினானும் சொல்லுப என்றலைக் குறித்தற்கு, என்க.
வரலாறு :
‘தூண்டில் வேட்டுவன் வாங்க வாரா’ (அகம் - 36)
எனவும்
‘புனறரு பசுங்காய் தின்ற’ (குறுந் - 292)
எனவும் வரும்.
இனி, இச் சூத்திரம் கொடுத்தல் கோடற் பொருண்மை மூன்றிடத்துஞ் சொல் நிகழுமாறு கூறியது என்பாரும் உளர். (30)
31.
யாதெவ னென்னு மாயிரு கிளவியும்
அறியாப் பொருள்வயிற் செறியத் தோன்றும்.
இச்சூத்திரம் என்னுதலிற்றோவெனின், அறியாத பொருளை அறியுங்காற் சொலற்பாலவாறு இது என்பதுணர்த்துதல் நுதலிற்று.
உரை:
யாது, எவன்
|