இனி, அஃறிணைக்கண், ‘இவ்வெருது புற்றின்னும்’ எனவரும்.
இவை யெல்லாம் மிகுதிவகையான் விளக்கினவாறு.
51. பலவயி னானு மெண்ணுத்திணை விரவுப்பெயர்
அஃறிணை முடிபின செய்யு ளுள்ளே.
இச் சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், இது திணைவழு அமையுமாறு கூறுதல் நுதலிற்று.
உரை:
பலவிடத்தினானும் உயர்திணையும் அஃறிணையும் விரவி எண்ணப்படும் பொருள் அஃறிணை முடிபினவாம் செய்யுளகத்து என்றவாறு.
வரலாறு :
‘வடுக ரருவாளர் வான்கரு நாடர்
சுடுகாடு பேயெருமை யென்றிவை யாறும்
குறுகா ரறிவுடையோர்.’
என வரும்.
இனிப், ‘பலவாயினானும் அஃறிணை முடிபின செய்யுளுள்ளே’ எனவே, சிலவயினான் அஃறிணை விரவாது உயர்திணையான் எண்ணி, அஃறிணை முடிபிற்றாகலும் உண்டு செய்யுளகத்து என்றவாறாம்.
அது வருமாறு :
‘பாணன் பறையன் துடியன் கடம்பனென்
றந்நான் கல்லது குடியு மில்லை.’ (புறநா - 335.)
என வரும். (51)
52. வினைவேறு படூஉம் பலபொரு ளொருசொல்
வினைவேறு படாஅப் பலபொரு ளொருசொலென்
றாயிரு வகைய பலபொரு ளொருசொல்.
இச்சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், பல பொருள் ஒரு சொல்லின் வகைமை உணர்த்துதல் நுதலிற்று.
உரை: வினையான் வேறுபடும் பல பொருள் ஒரு சொல்லும், வினையான் வேறுபடாத பல பொருள் ஒரு சொல்லும் என அவ்விரண்டு வகைப்படும் பல பொருள் ஒருசொல் என்றவாறு.
மற்றொரு பிரதியிற் கண்ட உரை :
இச் சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், ஒரு சொல்லான் வரும் பலபொருள் வகை கூறுதல் நுதலிற்று.
உரை: பல்பொருள் குறிக்கும் ஒருசொல், வினை வேறுபடுகின்ற பல்பொருள் ஒரு சொல் என, வினை வேறு படாஅப் பல்பொருள் ஒருசொல் என இரு வகைப்படும் என்றவாறு.
பல பொருள் குறிக்கும் ஒரு சொல்லினைப் பிற வகைப்படுத்திப் பகுத்தல் ஒல்லுமெனினும் வேறுபடுத்திக் கோடற்கண் வினையே சிறப்புடைமையின் இங்ஙனம் வகுத்தோதினார். (52)
53. அவற்றுள்
வினைவேறு படூஉம் பலபொரு ளொருசொல்
வேறுபடு வினையினு மினத்தினுஞ் சார்பினுந்
தேறத் தோன்றும் பொருடெரி நிலையே.
இச் சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், வினை வேறு படூஉம் பல்பொருளாமாறு உணர்த்துதல் நுதலிற்று.
உரை:
முற்படப் பகுத்தோதியவற்றுள், வினை வேறுபடூஉம், பலபொரு ளொருசொல்லை அறியுமிடத்து, வேறுபடு வினையினானும் இனத்தினானும் சார்பினானும் அறியப்படும் என்றவாறு.
வேறுபடு வினையான் அறிய வருமாறு :
மாத
|