- தன்மை முன்னிலையாகிய அவ்விரண்டிடத்திற்கும் உரிய, எ-று.
(எ-டு.) எனக்குத்
தந்தான்; நினக்குத் தந்தான்; என்னுழை வந்தான்;
நின்னுழை வந்தான்; ஈங்கு வந்தான்;
என ஈற்றான் அன்றித் தரவும்
வரவு மாகிய வினை, தன்கண்ணும் முன்னின்றான் கண்ணுஞ் சென்றன.
முன்னிற் சூத்திரத்துப் பொதுவிதியான்
மூன்றிடத்தும் வரைவின்றி
ஆமெனவுங் கொள்ள வைத்தமையான்,
‘பெருவிறல்
அமரர்க்கு வென்றி தந்த‘ (புறம்.55:3) ‘புனல்தரு
பசுங்காய் தின்ற’ (குறுந். 292:2) ‘தூண்டில் வேட்டுவன் வாங்க வாராது’
(அகம். 36:6)
‘அரிமலர் ஆய்ந்தகண் அம்மா கடைசி
திருமுகமுந் திங்களுஞ் செத்துத் - தெருமந்து
வையத்தும் வானத்துஞ் செல்லா தணங்காகி
ஐயத்துள் நின்ற தரவு.’
என மயங்குவனவும் அமைக.
‘தரவு வரவு உணர்த்துஞ்சொல்’ என்பது பொருள்.
(29)
படர்க்கைக்குரிய சொற்கள்
30. ஏனை இரண்டும் ஏனை இடத்த.
இதுவும் அது.
(இ-ள்.) ஏனை
இரண்டும் - செலவுச் சொல்லும் கொடைச்
சொல்லும், ஏனை இடத்த-படர்க்கைக்கு உரிய, எ-று.
(எ-டு.) அவன்கட்
சென்றான். ஆங்குச் சென்றான். அவர்க்குக்
கொடுத்தான் என, ஈற்றானன்றிச்
செலவுத்தொழிலுங் கொடைப்
பொருளும் படர்க்கையான்கட் சென்றுற்றன. (30)
யாது எவன் என்னுஞ் சொற்கள் அமையுமாறு
31.
யாதெவன் என்னும் ஆயிரு கிளவியும்
அறியாப் பொருள்வயின் செறியத் தோன்றும்
இஃது அறியாப் பொருள்மேல் சொல் நிகழ்த்தும்
மரபு கூறுகின்றது.
(இ-ள்.) யாது
எவன் என்னும் ஆயிரு கிளவியும் - யாது எவன்
என்று சொல்லப்படும் அவ்விரண்டு சொல்லும், அறியாப்பொருள்வயின்
செறியத் தோன்றும் - அறியாப் பொருளிடத்து
ஒருவன் வினாவும்
வினாவாய் யாப்
|