அழுங்குவித்தல், தலைமகனைச் செலவின் கண் அழுங்குவித்தல், தலைமகனைச் செலவை அழுங்குவித்தல், சாத்தனை நூலை ஓதுவித்தான், யாற்றை நீரை விலக்கினான்-என வரும் இவையும் உருபுமயங்கிய மயக்கம். (5)
முதலும் சினையும் சொல்லுவான் குறிப்பினவாதல்
89.
முதலுஞ் சினையும் பெருள்வேறு படாஅ
நுவலுங் காலைச் சொற்குறிப் பினவே.
இது முதல் சினைகளை ஆராய்கின்றது.
(இ-ள்.) முதலுஞ் சினையும் பொருள் வேறுபடாஅ- முதலுஞ் சினையும் முதலாயது முதலேயாய்ச் சினையாயது சினையேயாய்ப் பொருள்கள் தம்முள் வேறுபடநில்லா; நுவலுங்காலைச் சொற்குறிப்பின- சொல்லுங்கால் சொல்லுவானது சொல்லுதற் குறிப்பினான் முதலென்றும் சினையென்றும் வழங்கப்படும், எ-று.
(எ-டு.) கோட்டது நுனியைக் குறைத்தான், கோட்டை நுனிக்கண் குறைத்தான், கோட்டை நுனியைக் குறைத்தான் - என ஒரு முதலின் சினையை முதலாகக் குறித்தவழி அதுதான் முதலாய் நின்றவாறு காண்க. ‘படை’ என்பதனை முதலாகப் பார்க்கும்வழிப் ‘படையினது யானை’ என முதல் சினையாய் நிற்கும். (6)
பிண்டப்பெயரும் அவ்விலக்கணம் பெறுதல்
90.
பிண்டப் பெயரும் ஆயியல் திரியா
பண்டியல் மருங்கின் மரீஇய மரபே.
இது, பிறன் உடம்பட்டது தான் உடம்படுதல்; (பொருள். 665)
(இ-ள்.) பிண்டப் பெயரும் ஆயியல் திரியா - பல பொருள் தொகுதியை உணர்த்தும் பெயரும் முதற்சினைப் பெயர் இயல்பின் திரியா; பண்டு இயல் மருங்கின் மரீஇய மரபே - அவ்வாறு அவற்றை முதலும் சினையுமாக வழங்குதல் மேல்தொட்டு வழங்கி வாராநின்ற கூற்றான் மருவிய முறை,
|