நச்சினார்க்கினியர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   576
Zoom In NormalZoom Out


ம்;  ஆண்டு     அம்முறைமை    செயற்கையாமாகலின்,    அது
பொருளன்மை யுணர்க. (11) 

இரண்டாவதும் மூன்றாவதும் மயங்குமாறு

95. தடுமாறு தொழிற்பெயர்க் கிரண்டும் மூன்றும்
கடிநிலை யிலவே பொருள்வயி னான. 

இஃது, இரண்டாவதும் மூன்றாவதும் மயங்குமாறு கூறுகின்றது. 

(இ-ள்.)    தடுமாறு தொழிற்பெயர்க்கு-தனக்கே உரித்தாய் நில்லாது
ஒருகால்   ஈற்றுப்   பெயரொடும்   சென்று  தடுமாறும்  தொழிலொடு
தொடர்ந்த   பெயர்க்கு,   இரண்டும்   மூன்றும்  கடி  நிலை  இல  -
இரண்டாவதும்     மூன்றாவதும்     கடியப்படா,     பொருள்
வயினான-அவ்வேற்றுமை  தொக்கு  அவற்றின் பொருள் நிற்குமிடத்து,
எ-று. 

(எ-டு.) ‘புலிகொல் யானை’ என்புழிப் புலி செயப்படுபொருளாயவழி
இரண்டாவதும்,  அது வினைமுதலாய வழி மூன்றாவதும் விரியும். அது,
புலியைக் கொன்ற யானை, புலியாற் கொல்லப்பட்ட யானை என வரும்.

வினைத்தொகைக்கண்ணும்   செயப்படுபொருள் பிறக்குமோ எனின்,
செய்குன்று,  உறை பதி என்றாற்போல்வனவற்றுள் பிறந்தவாறு காண்க.
இஃது உருபு மயக்கம். (12) 

மேலதற்கு ஒரு புறனடை

96. ஈற்றுப்யெர் முன்னர் மெய்யறி பனுவலின்
வேற்றுமை தெரிப உணரு மோரே. 

இது, மேலதற்கு ஒரு புறனடை. 

(இ-ள்.)  ஈற்றுப் பெயர் முன்னர்-தடுமாறும் தொழிலொடு புணர்ந்த
இருவகைப்   பெயருள்  இறுதிப்  பெயர்  முன்னர்  வந்த,  மெய்யறி
பனுவலின்-  பொருள்  வேறுபாடு உணர்த்தும் சொல்லான், வேற்றுமை
தெரிப  உணருமோரே-அப்பொருள் வேற்றுமை தெரிவார் உணர்வோர்,
எ-று.