தொன்னெறி பிழையாது
உருபினும் பொருளினும் மெய்தடு மாறி
இருவயின் நிலையும் வேற்றுமை யெல்லாந்
திரிபிடன் இலவே தெரியு மோர்க்கே.
இது, வேற்றுமை மயக்கத்திற்குப் புறனடை.
(இ-ள்.) அன்ன பிறவும் - மேல் வேற்றுமை மயக்கம் கூறப்பட்ட வேற்றுமையே அன்றி அவை போல்வன பிறவும், தொன்னெறி பிழையாது - தொன்று தொட்டு வரும் வழக்கிற் பிழையாது, உருபினும் பொருளினும் மெய் தடுமாறி - உருபானும் பொருளானும் ஒன்றன் நிலைக்களத்து ஒன்று சென்று, இருவயின் நிலையும் வேற்றுமை எல்லாம் - பிறிது ஒன்றன் பொருளும் தன் பொருளுமாகிய ஈரிடத்தும் நிலைபெறும் வேற்றுமை எல்லாம், திரிபிடன் இலவே தெரியுமோர்க்கே - திரிபு உடைய அல்ல தெரிந்துணர்வோர்க்கு, எ-று.
ஏதுப்பொருட்கண் வரும் மூன்றாவதற்கும் ஐந்தாவதற்கும் இருவயின் நிற்றல் இன்மையின், அவற்றை ஒழித்து, ஏனையவற்றிற்கே இருவயின் நிற்றல் கொள்க. என்னை? ‘வழி போயினார் எல்லாரும் கூறை கோட்பட்டார்,’ என்றவழிக் கடவுளரை
ஒழித்து ஏனையோர்க்கே அக்கூறை கோட்படுதல் எய்தினாற்போல.
‘அன்ன பிற’ ஆவன,
நோயின் நீங்கினான், நோயை நீங்கினான்; சாத்தனை வெகுண்டான், சாத்தனொடு வெகுண்டான்; முறையாற்குத்தும் குத்து, முறையிற்குத்தும் குத்து - என வரும். இது ‘முறைக் குத்துக் குத்தினான்,’ எனத் தொக்கு நின்றதன்கண் இரண்டும் விரிந்தன.
கடலொடு காடு ஒட்டாது, கடலைக் காடு ஒட்டாது; தந்தையொடு சூளுற்றான், தந்தையைச் சூளுற்றான்-என இவை தொகையன்றியும் மயங்கி நிற்குமாறு உணர்க. (18)
பல உருபு தொடர்ந்து அடுக்கியவழிப்படுவதோர் இலக்கணம்
உருபுதொடர்ந் தடுக்கிய வே
|