நச்சினார்க்கினியர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   589
Zoom In NormalZoom Out


பொருளை   அறிவிக்குஞ் சொல்லும், சினையிற் கூறும் முதல் அறி
கிளவியும்-சினைச்சொல்  வாய்பாட்டான்  கூறப்படும்  முதற்பொருளை
அறிவிக்குஞ்   சொல்லும்,   பிறந்தவழிக்   கூறலும்-நிலத்துப்  பிறந்த
பொருள்மேல்  அந்நிலத்துப்பெயர்  கூறலும், பண்பு கொள் பெயரும் -
பண்புப்  பெயர் அப் பண்புடையதனை உணர்த்தி நிற்குஞ் சொல்லும்,
இயன்றது   மொழிதலும்-முதற்காரணப்   பெயரான்  அக்காரணத்தான்
இயன்ற   காரியத்தினைச்   சொல்லுதலும்,  இரு  பெயர்  ஒட்டும்  -
அன்மொழிப் பொருள்மேல் நில்லாத இரு பெயரொட்டும், வினை முதல்
உரைக்கும்  கிளவியொடு  தொகைஇ  -  செய்யப்பட்ட  பொருள்மேல்
அதனைச்  செய்தான்  பெயரைச்  சொல்லும் சொல்லோடே முற்கூறிய
ஆறுந்தொக்கு,   அனைய   மரபினவே   ஆகுபெயர்க்   கிளவி   -
அப்பெற்றிப்பட்ட இலக்கணத்தை உடையவாகும் ஆகுபெயரான சொல்,
எ-று. 

(எ-டு.)  கடுத்தின்றான், தெங்குதின்றான்; இலை நட்டு வாழும்,  பூ
நட்டு வாழும்; குழிப்பாடி நேரிது: என வரும். 

‘நீலம்’  என  மணியை  உணர்த்திற்று;  ‘பொன்’  எனக் குடத்தை
உணர்த்திற்று;  ‘மக்கட்சுட்டு’ என இரண்டும் அல்லாததொரு பொருளை
உணர்த்தாது   மக்களை   உணர்த்திற்று,  நன்கு  மதிக்கும்  பொருள்
மக்களேயாதலின். 

‘பொற்றொடி’ என்பது அன்மொழி; ஆகுபெயர் அன்மை உணர்க. 

வினை முதல் உரைக்கும் கிளவி - திருவள்ளுவர்  கற்றான் என்பது.
இவ்வாடைக் கோலிகன் என்பதும் அது. 

இச்சூத்திரத்தானே,  இயற்கைப்பெயரே     அன்றிக்    குறிப்பான்
பொருளுணர்த்தும் பெயரும் பெரும்பான்மை என்றார். (31) 

ஆகுபெயர் இலக்கணம் இருவகைத்து

116. அவைதாம்,
தத்தம் பெருள்வயின் தம்மொடு சிவணலும்
ஒப்பில் வழியான் பிறிதுபொருள் சுட்டலும்
அப்பண் பினவே நுவலுங் காலை.
 

இஃது, அவ்வாகுபெயர் இலக்கணம் இருவகை