என்கின்றது.
(இ-ள்.) அவைதாந் தத்தம் பொருள்வயின் தம்மொடு சிவணலும் - மேற்கூறப்பட்ட ஆகுபெயர்கள் தாம் தத்தம் பொருள்வயின் நீங்காது நின்று தம் பொருளின் வேறு அல்லாத பொருளொடு புணர்தலும், ஒப்பு இல் வழியான் பிறிது பொருட் சுட்டலும்-பொருத்தமில்லாத கூற்றான் நின்று பிறிது பொருளை உணர்த்தலும், அப்பண்பினவே நுவலுங்காலை - என்று சொல்லப்படுகின்ற அவ்விரண்டு இலக்கணத்தையும் உடைய சொல்லுங் காலத்து, எ-று.
(எ-டு.) கடுத்தின்றான், குழிப்பாடி நேரிது என வரும். (32)
ஆகுபெயரும் வேற்றுமை ஏற்றல்
117.
வேற்றுமை மருங்கின் போற்றல் வேண்டும்.
இஃது, ஆகுபெயரும் வேற்றுமை ஏற்கும் என்கின்றது.
(இ-ள்.) வேற்றுமை மருங்கின் போற்றல் வேண்டும் - அவ்வாகு பெயர்கள் ஐ முதலிய அறுவகை வேற்றுமைப் பொருண்மை யிடத்தும் இயைபு உடைமையைப் பாதுகாத்து அறியல் வேண்டும் ஆசிரியன், எ-று.
(எ-டு.) மக்கட்சுட்டை உயர்திணை என்மனார், தொல்காப்பியனால் செய்யப்பட்டது, தண்டூண் ஆதற்குக் கிடந்தது, பாவையினும் அழகியாள், கடுவினது காய் குழிப்பாடியுள் தோன்றியது, எனக் காண்க. (33)
ஆகுபெயர் வேறுபாடு
118.
அளவும் நிறையும் அவற்றொடு கொள்வழி
உளவென மொழிப உணர்ந்திசி னோரே.
இஃது, ஆகுபெயர் வேறுபாடு கூறுகின்றது.
(இ-ள்.) அளவும் நிறையும் அவற்றொடு கொள்வழி உள என மொழிப-அளவுப்பெயரும் நிறப்பெயரும் ஆகுபெயராகக் கொள்ளும் இடம் உடைய என்று சொல்லவர், உணர்ந்திசினோரே-உணர்ந்தோர், எ-று.
(எ-டு.) பதக்கு, தூணி; தொடி, துலாம் என அளக்கவும் நிறுக்கவும் பட்ட பொருட்கண் கிடந்த வரையறைக் குணப்பெயர் அப்பொருட்குப் பெயராயிற்று.
நெல்லை அளந்து பார்த்தும் பொன்னை நிறுத்துப்பார்த்தும் பின்னர் அவற்றிற்குப் ‘பதக்கு,
|