தியதன்மேல் சிறப்பு விதி.
(இ-ள்.) முறைப்பெயர் மருங்கின் ஐயென் இறுதி - முறைப் பெயரிடத்து ஐகார
ஈறு, ஆவொடு வருதற்கு உரியவும் உள - ஆய் ஆகாது ஆகாரத்தொடு வருதற்கு உரியனவும் உள, எ-று.
(எ-டு.) அன்னை - அன்னா! (குறுந்.161-4) அத்தை-அத்தா! என வரும். உம்மை மறுத்து நிற்றலின், ‘அன்னாய்! அத்தாய்!’ என்று வருதலே சிறப்பிற்று.
இவை விரவுப்பெயரேனும், ஈண்டு உயர்திணைப் பெயரிடை வைத்தார், மேல் விரவுப்பெயரை இவற்றொடு மாட்டெறிதலின் அம் மாட்டேற்றிற்கு ஏற்ப விளி ஏற்பன உயர்திணைப் பெயர்களுள் வேறின்மையான். (9)
அண்மை விளி
129.
அண்மைச் சொல்லே இயற்கை யாகும்.
இஃது, எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தது.
(இ-ள்.) அண்மைச் சொல்லே இயற்கை ஆகும் - நான்கு ஈற்று அண்மைக்கண் விளி ஏற்குஞ் சொற்கள் இயற்கையாய் விளி ஏற்கும், எ-று.
(எ-டு.) நம்பி! வாழி, வேந்து! வாழி, நங்கை! வாழி, கோ! வாழி, என வரும். (10)
உயர்திணையுள் விளியேற்கும் புள்ளி ஈறுகள்
130.
னரலள என்னும் அந்நான் கென்ப
புள்ளி இறுதி விளிகொள் பெயரே.
இது, புள்ளி ஈற்றுள் விளி ஏற்பன கூறுகின்றது.
(இ-ள்.) புள்ளி இறுதி விளிகொள் பெயர்-புள்ளி ஈற்றினையுடைய விளித்தலைக் கொள்ளும் உயர்திணைப்பெயர், னரலள என்னும் அந்நான்கு என்ப- ன ர ல ள என்று கூறப்படும் அந்நான்கு ஈற்றுப் பெயரும் என்று கூறுவர் ஆசிரியர், எ-று. (11)
உயர்திணையுள் விளி ஏலாப் புள்ளி ஈறுகள்
131.
ஏனைப் புள்ளி ஈறுவிளி கொள்ளா.
இது, வேண்டா கூறி, வேண்டியது முடிக்கின்றது.
(இ-ள்.) ஏனைப் புள்ளி ஈறு விளி கொள்ளா-அந்நான்கும் அல்லாத புள்ளி ஈற்றுப்பெயர் விளித்தலைக் கொள்ளா, எ-று.
இங்ஙனம் வேணடா கூறிய அதனாற் பயன், மேற் கூறுகின்ற
|