முறைப்பெயர்க்குக் கூறிய உரையை (128) ஈண்டுங் கூறிக்கொள்க. (19)
னகார ஈற்றுள் விளி ஏலாதவை
139.
தானென் பெயரும் சுட்டுமுதற் பெயரும்
யானென் பெயரும் வினாவின் பெயரும்
அன்றி யனைத்தும் விளிகோ ளிலவே.
இது, னகார ஈற்றுள் விளி ஏலாதன கூறுகின்றது.
(இ-ள்.) தான் என் பெயரும் சுட்டு முதற்பெயரும் யான் என் பெயரும் வினாவின் பெயரும் அன்றி அனைத்தும் விளிகோள் இலவே - ‘தான்’ என்னும் ‘ஆன்’ ஈற்று விரவுப்பெயரும், ‘அவன், இவன், உவன்’ என்னும் ‘அன்’ ஈற்றுச் சுட்டு முதற்பெயரும், ‘யான்’ என்னும் ‘ஆன்’ ஈற்றுப்பெயரும், ‘யாவன்’ என்னும் வினாப் பொருளை உணர்த்தும் ‘அன்’ ஈற்றுப்பெயரு மாகிய அவ்வனைத்தும் னகார ஈறேயாயினும் விளி கொள்ளா எ-று. (20)
ரகார ஈறு
140.
ஆரும் அருவும் ஈரொடு சிவணும்.
இது, முறையானே (130) ரகார ஈறு விளி ஏற்குமாறு கூறுகின்றது.
(இ-ள்.) ஆரும் அருவும் ஈரொடு சிவணும்-ரகார ஈற்றுப் பெயருள் ஆர், அர் என நின்ற இரண்டீற்றுப் பெயரும் ‘ஈர்’ ஆய் இறுதி திரிந்து விளி ஏற்கும், எ-று.
(எ-டு.) பார்ப்பர்-பார்ப்பீர்! கூத்தர்-கூத்தீர்! என வரும். (21)
அவ்வீற்று வினையாலணையும் பெயர்
141.
தொழிற்பெய ராயின் ஏகாரம் வருதலும்
வழுக்கின் றென்மனார் வயங்கி யோரே.
இஃது, எய்தியதன் மேல் சிறப்புவிதி கூறுகின்றது.
(இ-ள்.) தொழிற்பெயர் ஆயின் - மேற்கூறிய இரண்டீறும் தொழிற் பெயர்க்கு ஈறாய் வருமாயின், ஏகாரம் வருதலும் வழுக்கு இன்று என்மனார் வயங்கியோரே - மேற்கூறிய ஈரோடு ஏகாரம் வருதலுங் குற்றம் இன்று என்று கூறுவர் விளங்கிய அறிவினையுடையார், எ-று.
(எ-டு.) வந்தார் - வந்தீரே! சென்றார் - சென்றீரே! என வரும். ‘அர்’ ஈறு வந்துழிக் காண்க.
‘வழுக்கு இன்று,’ என்றதனான்,
|