அறிமின்,’ எனப் பெயர்த்திரி சொல்லாய்த் திரிந்து நின்று விளி ஏற்றலுங் கொள்க. (28)
ளகார ஈற்று வினைப்பெயரும் பண்புப்பெயரும்
148.
வினையினும் பண்பினும்
நினையத் தோன்றும் ஆளென் இறுதி
ஆய்ஆ கும்மே விளிவயி னான.
இஃது, அவ்விரண்டனுள் ளகார ஈற்றிற்கு எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுத்தது.
(இ-ள்.) வினையினும் பண்பினும் நினையத் தோன்றும் ஆள் என் இறுதி - வினைச்சொல்லின் கண்ணும் பண்புச்சொல்லின்கண்ணும் ஆராயத் தோன்றும் ‘ஆள்’ ஈற்றுப்பெயர், விளிவயினான ஆய் ஆகும்மே - விளிக்குமிடத்து இயல்பாகாது ‘ஆய்’ ஆய் விளி ஏற்கும், எ-று.
(எ-டு.) உண்டாள்-உண்டாய்! கரியாள்-கரியாய்! என வரும். ‘விளிவ யினான’ என்பதனை யாண்டுங் கூட்டுக. (29)
ளகார ஈற்று முறைப்பெயர்
149.
முறைப்பெயர்க் கிளவி முறைப்பெயர் இயல.
இஃது, எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தது.
(இ-ள்.) முறைப்பெயர்க் கிளவி முறைப்பெயர் இயல-ளகார ஈற்று முறைப்பெயர் னகார ஈற்று முறைப்பெயர் போல ஏகாரம் பெற்று விளி ஏற்கும், எ-று.
(எ-டு.) மகள்-மகளே! மருமகள்-மருமகளே! (அகம். 165:13) என வரும்.(30)
ளகார ஈற்றுப் பெயருள் விளி ஏலாதவை
150.
சுட்டுமுதற் பெயரும் வினாவின் பெயரும்
முற்கிளந் தன்ன என்மனார் புலவர்.
இது ளகார ஈற்றுள் விளி ஏலாதன கூறுகின்றது.
(இ-ள்.)
சுட்டு முதற்பெயரும் வினாவின் பெயரும் முற்கிளந்தன்ன என்மனார் புலவர் - ‘அவள், இவள், உவள்’ என்னும் ளகார ஈற்றுச் சுட்டு முதற்பெயரும் ‘யாவள்’ என்னும் வினாப்பெயரும் முற்கூறிய ஏகார ஈற்றுச் சுட்டு முதற்பெயரும் (144) வினாப்பெயரும் (145) போல விளி கொள்ளா, எ-று. (31)
ல ள ஈற்று அளபெடைப்பெயர்
151.
அளபெடைப் பெயரே அளபெடை இயல
இஃது, எய்தாதது எய்துவித்தது.
(இ-ள்.)
அளபெடைப் பெயரே அளபெடை இயல - லகார ளகார ஈற்று அளபெடைப்பெயர் முற்கூறிய
|