தலின்.(1)
சொல், தன்னையும் பொருளையும் உணர்த்தல்
158.
பொருண்மை தெரிதலுஞ் சொன்மை தெரிதலுஞ்
சொல்லி னாகும் என்மனார் புலவர்.
இதுவும், அச்சொற்கள் பொருளுணர்த்துமாறு கூறுகின்றது.
(இ-ள்.) பொருண்மை தெரிதலும்-சொல்லின் வேறாகிய பொருள்-தன்மை அறியப்படுதலும், சொன்மை தெரிதலும்-பொருள்தன்மை அறியப் படாது அச்சொல்தன்மை அறியப்படுதலும் என்ற இரண்டும், சொல்லின் ஆகும் என்மனார் புலவர்-சொல்லான் ஆம் என்று சொல்லுவர் புலவர், எ-று.
(எ-டு.) சாத்தன், வந்தான், பண்டு காடுமன், உறுகால் - இவை பொருள் தன்மை தெரிந்தன.
‘செய்தென் எச்சம்’ (241) ‘தஞ்சக் கிளவி’ (268) ‘வேறென் கிளவி’ (224) செய்கென் கிளவி’ (206) ‘கடியென் கிளவி’ (383) இவை சொல் தன்மை தெரிந்தன, அச்சொல் தன்மையே அறியப்படுதலின்.
‘ஈறுபெயர்க் காகும் இயற்கைய என்ப’ (70) என்றாற்போல்வன, பெயர் என்ற சொல்லை உணர்த்தலின், சொற்றன்மை தெரிதலும், பல பெயர்களும் உருபேற்றுழிச் செயப்படுபொருள் முதலிய பொருள்களை உணர்த்தலின் பொருண்மை தெரிதலும் உடன்நின்றனவாம். பிறவும் இவ்வாறு உடன் வருவன உணர்ந்து கொள்க. (2)
சொல், இருவகையான் பொருளுணர்த்தல்
159.
தெரிபுவேறு நிலையலுங் குறிப்பின் தோன்றலும்
இருபாற் றென்ப பொருண்மை நிலையே.
இதுவும் அது.
(இ-ள்.) பொருண்மை நிலையே-மேற்கூறப்பட்ட பொருள் தன்மை தெரிதல், தெரிபு வேறு நிலையலும் - சொன்மை மாத்திரத்தான் விளங்கி வேறு நிற்றலும், குறிப்பின் தோன்றலும் - சொன்மை மாத்திரத்தான் தோன்றாது சொல்லொடு கூடிய குறிப்பான் தோன்றலுமாகிய, இருபாற்று என்ப-இரண்டு கூற்றை உடைத்து என்று கூறுவர் ஆசிரியர், எ-று.
(எ-டு.) அவன், இவன், உவன்; வந்தான், சென்றான் - இவை தெரிந்தன. ஒருவர் வந்தார்
|