இது முற்கூறிய கருப்பொருட்குப் புறனடை.
(இ-ள்) எந்நில மருங்கிற் பூவும்
புள்ளும் - எழுதிணை நிகழ்ச்சியவாகிய நால்வகை நிலத்தும் பயின்ற பூவும்
புள்ளும்; அந்நிலம் பொழுதொடு வாரா ஆயினும்-தத்தமக்கு உரியவாகக் கூறிய நிலத்தொடுங் காலத்தொடும் நடவாமற் பிற நிலத்தொடுங் காலத்தொடும் நடப்பினும்; வந்த நிலத்தின் பயத்த ஆகும் - அவை வந்த நிலத்திற்குக் கருப்பொருளாம் எ-று.
ஓடு ‘அதனோடியைந்த ஒருவினைக் கிளவி (சொ.75) யாதலின் உடன்சேறல் பெரும்பான்மையாயிற்று. ‘வினைசெய் யிடத்தி னிலத்திற் காலத்தின்’ (சொ.83) என்பதனான் நிலத்தின் பயத்தவாமெனப் பொழுதினையும் நிலமென்று அடக்கினார். பூவைக் கருவென ஓதிற்றிலரேனும் முற்கூறிய மரத்திற்குச் சினையாய் அடங்கிற்று. ஒன்றென முடித்தலான் நீர்ப்பூ முதலியனவும் அடங்கும். இங்ஙனம் வருமிடஞ் செய்யுளிடமாயிற்று.
உ-ம்:
‘‘தாமரைக் கண்ணியை தண்ணறுஞ் சாந்தினை தேனிதழ்க் கோதையாள் செய்குறி நீவரின்’’
(கலி.52)
இது மருதத்துப்பூ, குறிஞ்சிக்கண் வந்தது.
‘‘உடையிவ ளுயிர்வாழா ணீநீப்பி னெனப்பல விடைகொண்டியா மிரப்பவு மெமகொள்ளா யாயினை கடைஇய வாற்றிடை நீர்நீத்த வறுஞ்சுனை யடையொடு வாடிய வணிமலர் தகைப்பன’’
(கலி.3)
இது மருதத்துப்பூ, பாலைக்கண் வந்தது.
‘‘கன்மிசை மயிலாலக் கறங்கியூ ரலர்தூற்றத் தொன்னல நனிசாய நம்மையோ மறந்தைக்க வொன்னாதார்க் கடந்தடூஉ முரவுநீர் மாகொன்ற வென்வேலான் குன்றின்மேல் விளையாட்டும்
விரும்பார்கொல்’’ (கலி.27)
இது குறிஞ்சிக்குப்
பயின்ற மயில் பாலைக்கண் இளவேனிற் கண்வருதலிற் பொழுதொடு புள்ளு மயங்கிற்று. கபிலர் பாடிய பெருங் குறிஞ்சியில் (குறிஞ்சிப்.) வரைவின்றிப் பூமயங்கியவாறு காண்க. பிறவும் இவ்வாறு மயங்குதல் காண்க. ஒன்றென முடித்தலாற் பிற கருப்பொருள் மயங்குவன உளவேனுங் கொள்க.
திணைப்பெயரும் திணைநிலைப்பெயரும் இருவகையாதல்
|