நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   2331
Zoom In NormalZoom Out


போக்குடன்பட்டு       மீள்பவென்று    கொள்க.   அவ்வெளிப்பாடு
கற்பாதலிற்   கற்பென்றார்.   ‘உளப்பட’  வென்றதனான்  வலித்தலும்
விடுத்தலும் அகப்பட வென்றாராயிற்று.

நாளது    சின்மையும் இளமையது அருமையும் தாளாண் பக்கமும்
தகுதியது அமைதியும் இன்மையது  இளிவும் உடைமையது உயர்ச்சியும்
அன்பினது    அகலமும்    அகற்சியது    அருமையும்    ஒன்றாப்
பொருள்வயின்   ஊக்கிய   பாலினும்  -  வாழ்க்கைநாள்  சிலவாதல்
ஏதுவாகப்   பொருள்   செய்தல்  குறித்தாரை  இளமையது அருமை
இன்பத்தின்கண்ணே  ஈர்த்து  ஒன்றாமையும்,  மடியின்மை ஏதுவாகப்
பொருள்செயல்   குறித்தாரை   யாதானும்   ஓர்  ஆற்றாற் பொருள்
செய்யலாகாது,  தத்தம் நிலைமைக் கேற்பச் செயல்வேண்டு  மென்னுந்
தகுதியதமைதி   ஒன்றாமையும்,   இன்மையான்   வரும்   இளிவரவு
நினைத்துப்    பொருள்செய்ய   நினைந்தாரைப்   பொருளுடைமைக்
காலத்து   நிகழும்   உயர்ச்சி  அதற்கு  இடையூறாகிப் பொருணசை
யுள்ளத்தைத்  தடுத்து  ஒன்றாமையும்,  பிரிந்துழி நிகழும் அன்பினது
அகலங்  காரணமாகப்  பொருள்செய்யக் குறித்தாரைப் பிரிவாற்றாமை
யிடைநின்று  தடுத்து  ஒன்றாமையுமாய், ஒன்று ஒன்றனோடு ஒன்றாது
வரும்   பொருட்டிறத்துப்   பிரிதற்குத்  தலைவன்  உள்ளம் எடுத்த
பகுதிக்கண்ணும்;

எனவே,  நாளது சின்மையுந் தாளாண்பக்கமும் இன்மைய திளிவும்
அன்பின  தகலமும்  பொருள் செயல்வகைப்பால ஆதலும், இளமைய
தருமையுந்  தகுதிய  தமைதியும்  உடைமைய  துயர்ச்சியும் அகற்சிய
தருமையும்   இன்பத்தின்பால   ஆதலுங்   கூறினார்.  இவ்வெட்டும்
பொருள் செயற்கு ஒன்றா வென்னாமோ எனின், வாழ்நாள் சிறிதென்று
உணர்ந்து   அதற்குள்ளே   பொருள்   செய்து  அறமும்  இன்பமும்
பெறுதற்குக்  கருதிய  வழி,  ஆண்டு  முயற்சியும் இன்மையான்வரும்
இளிவரவும் அதற்கு ஒருப்படுத்துங் கருவியாதலானும், பொருள் பின்பு
அன்பிற்குப்      பெருக்கந்       தருமாதலானும்,     இந்நான்கும்
பொருள்செய்தற்கு  வேண்டுமென  மறுக்க. இவ்வெட்டற்குந் தலைவன்
கூற்றாக உதாரணம் வருவன உளவேற் கண்டுகொள்க.

‘‘ஈதலுந் துய்த்தலு மில்லோர்க் கில்லெனச்
செய்வினை கைம்மிக வெண்ணுதி யவ்வினைக்
கம்மா வரிவையும் வருமோ
வெம்மை யுய்த்தியோ வுரைத்திசி னெஞ்சே’’  (குறுந்.63)

இக்     குறந்தொகையுள் இன்மையதிளிவு நெஞ்சிற்குக் கூறியவாறு
காண்க.  பகுதியென்றதனானே,  தலைவன்  பிரிவலெனக் கூறுவனவும்
பிறவுங் கொள்க.

‘‘இன்றே சென்று வருதும் நாளைக்
குன்றிழி யருவியின் வெண்டேர்முடுக
இளம்பிறையன்ன விளங்கு சுடர்நேமி
விசும்புவீசுக் கொள்ளியிற் பைம்பயிர் துமியக்
காலியற் செலவீன் மாலையெய்திச்
சின்னிரை வாள்வளைக் குறுமகள்
பன்மா ணாக மணத்துவக்குவமே’’           (குறுந்.189)

எனவரும். இது குறுந்தொகை.