நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   2332
Zoom In NormalZoom Out


இவை வணிகர்க்கே உரியன.

இனித்  தலைவன்  கூற்றினைத்  தலைவியுந்  தோழியுங் கொண்டு
கூறுவன பெரும்பான்மை. அவையெல்லாம் ‘நிகழ்ந்து  கூறி நிலையலுந்
திணையே’ (44) என மேல்வருஞ் சூத்திரத்துட் காட்டுதும்.

வாயினுங்     கையினும் வகுத்த பக்கமோடு ஊதியம் கருதிய ஒரு
திறத்தானும்  -  உண்மைப்  பொருளிடத்தும்  அதற்கேற்ற  ஒழுக்கத்
திடத்துங்  கூறுபடுத்துக்  கூறிய  நூல்களாற் பெறும் பயனைக் கருதிய
ஒரு கூற்றின் கண்ணும்;

என்றது, வீடுபேற்றிற்கு உதவியாகிய நூல்களை ஓதற்குப் பிரிவுழியு
மென்றதாம்.   இதற்குத்   தலைவன்  கூற்றாக  உதாரணம்  வருவன
உளவேற் கொள்க.

புகழும்     மானமும் எடுத்து வற்புறுத்துலும் - போகம் வேண்டிப்
பொதுச்சொற்  பொறுத்தல்  (புறம்.8)  அரசியலன்றாதலிற்  றமக்கேற்ற
புகழும்   பெருமையும்   எடுத்துக்காட்டி   இதனாற்  பிரிது  மெனத்
தலைவியையுந் தோழியையும் வற்புறுத்தற்கண்ணும்;

இதற்குத் தலைவன் கூற்று வந்துழிக் காண்க.

தூது  இடையிட்ட வகையினானும் - இருபெரு வேந்தர் பொருவது
குறித்துழி  இருவரையுஞ்  சந்து செய்வித்தற்பொருட்குக் கூட்டத்திற்கு
இடையிட்ட பிரிதற் பகுதிக்கண்ணும்:

ஒருவனுழை     ஒருவன் மாற்றங்கொண் டுரைத்தலிற் றூதாயிற்று.
‘வகை’யென்றார்,  வணிகரின்  அரசர்க்கும்  அரசரின் அந்தணர்க்குந்
தூது   சிறந்ததென்றற்கும்,   குறுநிலமன்னர்க்குப்  பெரும்  பான்மை
யென்றற்கும்,     வேந்தர்தம்மின்     இழிந்தாருழைத்   தூதுசேறல்
உரித்தன்றென்றற்கும். இதற்குத் தலைவன் கூற்று வந்துழிக் காண்க.

ஆகித் தோன்றும் பாங்கோர் பாங்கினும்-தனக்கு ஆக்கஞ் சிறந்த
நட்புடையோராகித்   தோன்றும்  நட்புடையோர்க்கு உற்றுழி  உதவச்
சேறற்கண்ணும்;

இதற்கு    ‘‘மலைமிசைக்  குலைஇய’’  (அகம்.84)  என்பதூஉம்
‘‘இருபெரு வேந்தர் மாறுகொள்’’(அகம்.174) என்பதூஉம் முன்னர்க்
காட்டினாம். (சூ.24.உரை) அவற்றை உதாரணமாகக் கூறிக்கொள்க.

மூன்றன்  பகுதியும்  -  அறத்தினாற் பொருளாக்கி அப்பொருளாற்
காமநுகர்வலென்று   பிரிதற்கண்ணும்;   மண்டிலத்து  அருமையும்  -
அங்ஙனம்  பொருள்  வருவாய்க்கு  ஏதுவாகிய  வேற்றுப் புலங்களின்
அருமை கூறிப் பிரிதற்கண்ணும்;

இதற்குத் தலைவன் கூற்று வந்துழிக் காண்க.

தோன்றல்     சான்ற மாற்றோர் மேன்மையும் - தோற்றஞ் சான்ற
புகழினராகிய     வேற்று    வேந்தர்தமது    மீக்கூற்றங்    கருதிப்
பிரிதற்கண்ணும்;

இதற்குத் தலைவன் கூற்று வந்துழிக் காண்க.

‘தோன்றல் சான்ற’ என்றதனாற் றெவ்வர்  தன்னின்  மிக்காரெனக்
கேட்டுழி அழுக்காறு தோன்றலின், அதுவும் பிரிதற்கு ஏதுவா