இது முன்னர்க்
கூற்றிற்கு உரியரெனக் கூறாதோர்க்குங் கூற்று விதித்தலின் எய்தாத தெய்துவித்தது.
(இ-ள்.)
எஞ்சியோர்க்கும் - முன்னர்க் கூறாது நின்ற செவிலிக்குந் தலைவிக்கும் ஆயத்தோர்க்கும் அயலோர்க்கும்; எஞ்சுதல் இலவே -கூற்றொழித லில எ-று.
செவிலிக்குக் கூற்று நிகழுமாறு:-
‘‘கிளியும் பந்துங் கழங்கும் வெய்யோள் அளியும் அன்புஞ் சாயலும் இயல்பும் முன்னாள் போலாள் இறீஇயரென் உயிரெனக் கொடுந்தொடைக் குழவியொடு வயின்மரத் தியாத்த கடுங்கட் கறவையிற் சிறுபுற நோக்கிக் குறுக வந்து குவவுநுதல் நீவி மெல்லெனத் தழீஇயினே னாக என்மகள் நன்னர் ஆகத் திடைமுலை வியர்ப்பப் பல்கால் முயங்கினள் மன்னே அன்னோ விறன்மிகு நெடுந்தகை பலபா ராட்டி வறனிழல் அசைஇ வான்புலந்து வருந்திய மடமான் அசாவினந் திரங்குமரல் சுவைக்குங் காடுடன் கழிதல் அறியின் தந்தை அல்குபத மிகுத்த கடியுடை வியனகர்ச் செல்வுழிச் செல்வுழி மெய்ந்நிழல் போலக் கோதை யாயமோ டோரை தழீஇத் தோடமை அரிச்சிலம் பொலிப்பஅவள் ஆடுவழி ஆடுவழி அகலேன் மன்னே.’’
(அகம்.49)
இவ் வகப்பாட்டு உடன்போன
தலைவியை நினைந்து செவிலி மனையின்கண் மயங்கியது.
‘‘அத்த நீளிடை யவனொடு போகிய முத்தேர் வெண்பன் முகிழ்நகை மடவர றாய ரென்னும் பெயரே வல்லா றெடுத்தேன் மன்ற யானே கொடுத்தோர் மன்றவவ ளாயத் தோரே.’’
(ஐங்குறு.380)
இவ் வைங்குறுநூறு செவிலி
தெருட்டுவார்க்குக் கூறியது. முலைமுகஞ் செய்தன முள்ளெயி றிலங்கின’’ என்னும் அகப்பாட்டு (7) மகட்போக்கிய செவிலித்தாய் சுரத்திடைப் பின் சென்று நவ்விப் பிணையைக் கண்டு சொற்றது. செவிலி கானவர் மகளைக்
கண்டு கூறியதுமாம்.
‘‘காலே பரி
|