இது முறையே உள்ளுறையுவமங் கூறுகின்றது.
(இ-ள்.)
உள்ளுறை - உள்ளுறை யெனப்பட்ட உவமம்; தெய்வம் ஒழிந்ததை நிலன் எனக் கொள்ளும் என்ப - தெய்வ முதலிய கருப்பொருளுட் டெய்வத்தை ஒழித்து ஒழிந்த கருப்பொருள்களே தனக்குத் தோன்றும் நிலனாகக் கொண்டு புலப்படுமென்று கூறுப; குறி அறிந்தோரே - இலக்கணம் அறிந்தோர் எ-று.
எனவே, உணவு
முதலிய பற்றிய அப்பொருணிகழ்ச்சி பிறிதொன்றற்கு உவமையாகச் செய்தல் உள்ளுறையுவமமாயிற்று.
உ-ம்:
‘‘ஒன்றே னல்ல னொன்றுவென் குன்றத்துப் பொருகளிறு மிதித்த நெரிதாள் வேங்கை குறவர் மகளிர் கூந்தற் பெய்ம்மார் நின்றுகொய மலரு நாடனொ டொன்றேன் றோழிமற் றொன்றி னானே’’
(குறுந்.208)
இக் குறுந்தொகை, பிறிதொன்றின் பொருட்டுப் பொருகின்ற யானையான் மிதிப்புண்ட வேங்கை நசையற உணங்காது மலர்கொய் வார்க்கு எளிதாகி நின்று பூக்கும் நாடனென்றதனானே தலைவன் நுகருங் காரணத்தானன்றி வந்து எதிர்ப்பட்டுப் புணர்ந்து நீங்குவான் நம்மை இறந்துபாடு செய்வியாது ஆற்றுவித்துப் போயினானெனவும், அதனானே நாமும் உயிர்தாங்கியிருந்து பலரானும் அலைப்புண்ணா நின்றனம் வேங்கை மரம் போல எனவும், உள்ளத்தான் உவமங்கொள்ள வைத்தவாறு காண்க.
ஒழிந்தனவும் வந்துழிக் காண்க.
இனி அஃது உள்ளத்தான் உய்த்துணரவேண்டுமென
மேற் கூறுகின்றார். (47)
உள்ளுறை யுவமமாவது இதுவெனல்
|