நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   2350
Zoom In NormalZoom Out


உவமிக்கப்படும்     பொருளாகிய  வாயினையும்  புலப்படக் கூறலின்
ஏனையுவம   மாயிற்று.  அகத்திணைக்கு  உரித்தல்லாத  இதனையும்
உடன்  கூறினார். உவமம் இரண்டல்லதில்லையென வரையறுத்தற்கும்,
இதுதான்    உள்ளுறை    தழீஇ    அகத்திணைக்குப்    பயம்பட்டு
வருமென்றற்கும்.                                        (49)

கைக்கிளைக்குச் சிறந்தபொருள் இதுவெனல்
 

50. காமஞ் சாலா விளமை யோள்வயின்
ஏமஞ் சாலா இடும்பை எய்தி
நன்மையுந் தீமையும் என்றிரு திறத்தான்
தன்னோடும் அவளொடுந் தருக்கிய புணர்த்துச்
சொல்லெதிர் பெறாஅன் சொல்லி இன்புறல்
புல்லித் தோன்றுங் கைக்கிளைக் குறிப்பே.
 

இது  முன்னர்  அகத்திணை  ஏழென நிறீஇ, அவற்றுள் நான்கற்கு
நிலங்கூறிப்,   பாலையும்   நான்கு   நிலத்தும்   வருமென்று   கூறி,
உரிப்பொருளல்லாக்    கைக்கிளை   பெருந்திணையும்   அந்நிலத்து
மயங்கும்  மயக்கமுங்  கூறிக், கருப்பொருட்பகுதியும் கூறிப்,  பின்னும்
பாலைப்பொருளாகிய     பிரிவெல்லாங்     கூறி,   அப்பகுதியாகிய
கொண்டுதலைக்கழிவின்கட்     கண்ட     கூற்றுப்பகுதியுங்    கூறி,
அதனோடொத்த   இலக்கணம்   பற்றிப்   முல்லை முதலியவற்றிற்கு
மரபுகூறி,  எல்லாத்திணைக்கும்  உவமம்  பற்றிப்  பொருள்  அறியப்
படுதலின்    அவ்வுவமப்பகுதியுங்   கூறி,   இனிக்    கைக்கிளையும்
பெருந்திணையும்    இப்பெற்றிய    வென்பார்.    இச்சூத்திரத்தானே
கைக்கிளைக்குச் சிறந்த பொருள் இது வென்பது உணர்த்துகின்றார்.

(இ-ள்.)  காமம் சாலா  இளமையோள் வயின் - காமக் குறிப்பிற்கு
அமைதியில்லாத    இளமைப்    பிராயத்தாள்   ஒருத்தி   கண்ணே;
ஏமஞ்சாலா  இடும்பை  எய்தி  -  ஒரு  தலைவன்  (இவள்  எனக்கு
மனைக்கிழத்தியாக  யான்  கோடல்  வேண்டுமெனக்  கருதி) மருந்து
பிறிதில்லாப்    பெருந்துயரெய்தி;   நன்மையும்   தீமையும்   என்று
இருதிறத்தான் தன்னொடும் அவளொடும் தருக்கிய புணர்ந்து - தனது
நன்மையும்  அவளது  தீமையுமென்கின்ற  இரண்டு  கூற்றான்  மிகப்
பெருக்கிய  சொற்களைத்  தன்னொடும் அவளொடுங் கூட்டிச்சொல்லி;
சொல்   எதிர்பெறாஅன்   சொல்லி  இன்புறல்  -  அச்சொல்லுதற்கு
எதிர்மொழி  பெறாதே  பின்னுந் தானே சொல்லி இன்புறுதல்; புல்லித்
தோன்றும் கைக்கிளைக் குறிப்பே - பொருந்தி தோன்றுங் கைக்கிளைக்
குறிப்பு எ-று.

அவளுந்     தமருந்   தீங்குசெய்தாராக   அவளொடு  தீங்கைப்
புணர்த்துந்,   தான்  ஏதஞ்செய்யாது  தீங்குபட்டானாகத்  தன்னொடு
நன்மையைப்  புணர்த்தும்  என நிரனிறையாக உரைக்க. இருதிறத்தாற்
றருக்கிய எனக் கூட்டுக.

உ-ம்:

‘‘வாருறு வணரைம்பால் வணங்கிறை நெடுமென்றோட்
பேரெழின் மலருண்கட் பிணை