இது ‘முன்னைய மூன்றுங் கைக்கிளைக் குறிப்பே’ (தொல். பொ. கள. 14.) எனக் களவியலுட் கூறுஞ் சிறப்பில்லாக் கைக்கிளை போலன்றிக் காமஞ் சாலா இளமையோள்வயிற் கைக்கிளை போல இவையுஞ் சிறந்தன என, எய்தாதது எய்துவித்தது.
(இ-ள்.)
இயற்கைப் புணர்ச்சிக்கு முன்னிகழ்ந்த காட்சியும் ஐயமுந் தெரிதலும்
தேறலும் என்ற குறிப்பு நான்கும் நற்காமத்துக்கு இன்றியமையாது வருதலின், முற்கூறிய சிறப்புடைக் கைக்கிளையாதற்கு உரியவென்று கூறுவர் ஆசிரியர் எ-று.
களவியலுட் கூறுங் கைக்கிளை சிறப்பின்மையின் முன்னதற் குரியவெனச் சிறப்பெய்துவித்தார். களவியலுள் ‘ஒத்த கிழவனங் கிழத்தியுங் காண்ப’ (தொல். பொ. கள. 2) என்றது
முதலாக இந்நான்குங் கூறுமாறு ஆண்டுணர்க. இவை தலைவி
வேட்கைக் குறிப்புத் தன்மேனிகழ்வதனைத் தலைவன் அறிதற்கு முன்னே தன் காதன்மிகுதியாற் கூறுவனவாதலிற் கைக்கிளையாயின.
இவை தலைவற்கே உரியவென்பது, ‘சிறந்துழி யையஞ் சிறந்த தென்ப (தொல். பொ. கள.3) என்னும் சூத்திரத்திற் கூறுதும். இவையும் புணர்ச்சி நிமித்தமாய்க் குறிஞ்சியாகாவோ வெனின், காட்சிப்பின் தோன்றிய ஐயமும் ஆராய்ச்சியுந் துணிவும் நன்றெனக் கோடற்கும் அன்றெனக் கோடற்கும் பொதுவாகலின், இவை ஒருதலையாக நிமித்தமாகா; வழிநிலைக் காட்சியே நிமித்தமா மென்றுணர்க. (52)
புலனெறி வழக்கம் கலிப்பாவின்கண்ணும் பரிபாடற்கண்ணும் நடத்தற்கு உரித்தாதல்
|