நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   2362
Zoom In NormalZoom Out


ஒரு     துறையாயினாற்போலப்  புறத்திணைக்கும்  அவ்வப் பொருட்
பகுதியும்    ஒரு    துறையாதலும்,   ஒரு   செய்யுளுட்   பலதுறை
ஒருங்குவந்தும்  ஒரு  துறைப்படுதலுங்கொள்க.  இன்னும்  இதனானே
அகத்திணைக்கு உரியனவெல்லாம் புறத்திணைக்குங் கொள்க.

வெட்சித் திணையின் பொதுவிலக்கணம்
 

55. வேந்துவிடு முனைஞர் வேற்றுப்புலக் களவின்
ஆதந் தோம்பல் மேவற் றாகும்.
 

இது வெட்சியெனக் கூறிய  புறத்திணைக்குப்  பொது  இலக்கணங்
கூறுகின்றது.

(இ-ள்.)     வேந்து  விடு முனைஞர்  - வேந்தனால் விடப்பட்டு
முனைப்புலங்  காத்திருந்த  தண்டத் தலைவர்; வேற்றுப் புலக்களவின்
-பகைநிலத்தே சென்று களவினானே; ஆ தந்தோம்பல் மேவற்றாகும்-
ஆநிரையைக்       கொண்டு       போந்து      பாதுகாத்தலைப்
பொருந்துதலையுடைத்தாகும் வெட்சித்திணை எ-று.

களவுநிகழ்கின்ற     குறிஞ்சிப்பொருளாகிய  கந்தருவமணம் வேத
விதியானே   இல்லறமாயினாற்போல,   இருபெருவேந்தர்  பொருவது
கருதியக்கால்  ஒருவர்  ஒருவர்  நாட்டு  வாழும் அந்தணரும் ஆவும்
முதலியனதீங்கு  செய்யத்  தகாத சாதிகளை ஆண்டுநின்றும் அகற்றல்
வேண்டிப்   போதருகவெனப்   புகறலும்,   அங்ஙனம்  போதருதற்கு
அறிவில்லாத    ஆவினைக்    களவினாற்   றாமே   கொண்டுவந்து
பாதுகாத்தலுந்  தீதெனப்படா  அறமேயாம்  என்றற்கு ‘ஆதந்தோம்ப’
லென்றார்.

அது.

‘‘ஆவு மானியற் பார்ப்பன மாக்களும்
பெண்டிரும் பிணியுடை யீரும் பேணித்
தென்புல வாழ்நர்க் கருங்கட னிறுக்கும்
பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரு
வெம்மம்பு கடிவிடுது நும்மரண் சேர்மினென
வறத்தாறு நுவலும் பூட்கை மறத்தின்’’         (புறம்.9)

எனச்     சான்றோர்   கூறியவாற்றா  னுணர்க.  மன்னுயிர்  காக்கும்
அன்புடை  வேந்தற்கு  மறத்துறையினும்  அறமே  நிகழும்  என்றற்கு
‘மேவற்றாகு’மென்றார். அகநாட்டன்றிப் புறஞ்சிறைப் பாடியில் ஆநிரை
காக்குங்  காவலரைக்  கொன்றே  நிரைகொள்ள  வேண்டுதலின்  ஊர்
கொலையுங்  கூறினார்.  வேந்துவிடு  வினைஞர் என்னாது ‘முனைஞர்’
என்றதனானே    முனைப்புலங்   காத்திருந்தோர்   தாமே   சென்று
நிரைகோடலுங்,   குறுநிலமன்னர்   நிரைகோடலும்,   ஏனை  மறவர்
முதலியோர்  நிரைகோடலுமாகிய  வேத்தியல் அல்லாத பொதுவியலுங்
கொள்க.  முன்னர்  (தொல்.  பொ.  புறத்.  1)  வெட்சி  குறிஞ்சிக்குப்
புறனெனக்    களவுகூறிய    அதனானே,    அகத்திற்கு    ஏனைத்
திணைக்கண்ணுங்  களவு  நிகழ்ந்தாற் போலப் புறத்திணை யேழற்குங்
களவுநிகழுங்