நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   2383
Zoom In NormalZoom Out


நாட்டுதல்   காட்டுநாட்டோர்  முறைமை யென்பது ‘சீர்த்தகு சிறப்பின்’
என்பதனாற் கொள்க. ‘‘பெயரும் பீடு மெழுதி யதர்தொறும் - பீலி
சூட்டிய  பிறங்கு  நிலை  நடுகல்’’
என  அகத்திற்கும்  (அக்ம.131)
வருதலிற்   பொதுவியலாயிற்று;  இவை  ஒரு  செய்யுட்கண்  ஒன்றும்
பலவும்  வருதலும், அகத்தின்கண் வருதலுஞ், சுட்டி யொருவர் பெயர்
கோடலுங், கொள்ளாமையும் உடையவென்று உணர்க.

இப்பொதுவியலின்   பின்  வஞ்சி   வைத்தார்,   வஞ்சிக்கண்ணும்
பொதுவியல்    வருவனவுள   என்றற்கு.  அது  ‘‘வேந்து   வினை
முடித்தனன்’’
 என்னும் அகப்பாட்டினுட் (104) சுட்டியொருவர் பெயர்
கூறா வஞ்சி பொதுவியலாய் வந்தவாறு காண்க.                 (5)

வஞ்சி முல்லையது புறனாதல்
 

59.வஞ்சிதானே முல்லையது புறனே.
 

இது,   தம்முண்  மாறுபாடு  கருதி வெட்சித்திணையை நிகழ்த்திய
இருபெரு  வேந்தருள்   தோற்றோ னொருவன் ஒருவன் மேற்செல்லும்
வஞ்சித்திணை   அகத்திணையுள்   இன்னதற்குப் புறனா மென்கின்றது.
வஞ்சியென்றது   ஒருவர்மே   லொருவர்  சேறலை.  அதற்கு  வஞ்சி
சூடிச்சேறலும் உலகியல்.

(இ-ள்.)   வஞ்சி    தானே   -  வஞ்சியெனப்பட்ட  புறத்திணை;
முல்லையது   புறனே   -  முல்லை  யெனப்பட்ட  அகத்திணைக்குப்
புறனாம் எ-று.

ஏனை  உழிஞை  முதலியவற்றினின்று பிரித்தலின் ஏகாரம் பிரிநிலை.
பாடாண்டிணைக்குப்  பிரிதலின்மையிற்
‘‘பாடாண் பகுதி கைக்கிளைப்
புறனே’’
 (தொ.  பொ.  புற.  24)  என்ப.  ஏனைய பிரித்துக் கூறுவர்.
முதலெனப்பட்ட  காடுறையுலகமுங்,  கார்  காலமும், அந்நிலத்திற்கேற்ற
கருப்பொருளும்,   அரசன்    பாசறைக்கட்    டலைவியைப்   பிரிந்து
இருத்தலும்,       அவன்       தலைவி     அவனைப்     பிரிந்து
மனைவயினிருத்தலுமாகிய   உரிப்பொருளும்   ஒப்பச் சேறலின், வஞ்சி
முல்லைக்குப்  புறனாயிற்று.  வெஞ்சுடர்   வெப்பம் நீங்கத் தண்பெயல்
பெய்து  நீரும்  நிழலும்  உணவும்  பிறவும்  உளவாகிய  காட்டகத்துக்
களிறு  முதலியவற்றொடு  சென்றிருத்தல்  வேண்டுதலின்   வஞ்சிக்கும்
அம் முதல் கருவுரியும் வந்தனவாம். முல்லைப் பாட்டினுள்,

‘‘கான்யாறு தழீஇய வகனெடும் புறவிற்
சேணாறு பிடவமொடு பைம்புத லெருக்கி
வேட்டுப்புழை யருப்ப மாட்டிக் காட்ட
விடுமுட் புரிசை யேமுற வளைஇப்
படுநீர்ப் புணரியிற் பரந்த பாடி.’’ 
                         
(பத்துப். முல்லைப்.24-28)

என்பதனான் உணர்க.