நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   2397
Zoom In NormalZoom Out


திய கூற்றும்;

உ-ம்:

‘‘கலையெனப் பாய்ந்த மாவு மலையென
மயங்கம ருழந்த யானையு மியம்படச்
சிலையலைத் துய்ந்த வயவரு மென்றிவை
பலபுறங் கண்டோர் முன்னா ளினியே
யமர்புறங் கண்ட பசும்புண் வேந்தே
மாக்களி றுதைத்த கணைசேர் பைந்தலை
மூக்கறு நுங்கிற் றூற்றயற் கிடப்பக்
களையாக் கழற்காற் கருங்க ணாடவர்
உருகெழு வெகுளியர் செறுத்தன ரார்ப்ப
மிளைபோ யின்று நாளை நாமே
யுருமிசை கொண்ட மயிர்க்கட்
டிருமுர சிரங்க வூர்கொள் குவமே.’’    (தகடூர் யாத்திரை)

என வரும்.

இது சேரமான், பொன்முடியாரையும்  அரிசில்கிழாரையும்  நோக்கித்
தன்படைபட்ட தன்மைகூறக் கேட்டோற்கு, அவர் கூறியது.

திறப்பட  ஒரு  தான்  மண்டிய  குறுமையும்  -  அகத்திருந்தோன்
தன்னரணழிவு தோன்றியவழிப் புறத்துப் போர்செய்யுஞ் சிறுமையும்;

உ-ம்:

‘‘வருகதில் வல்லே வருகதில் வல்லென
வேந்துவிடு விழுத்தூ தாங்காங் கிசைப்ப
நூலரி மாலை சூடிக் காலின்
தமியன் வந்த மூதி லாளன்
அருஞ்சமந் தாங்கி முன்னின் றெறிந்த
வொருகை யிரும்பிணத் தெயிறு மிறையாகத்
திரிந்த வாய்வா டிருத்தாத்
தனக்கிரிந்த தானை பெயர்புற நகுமே’’       (புறம்.284)

என வரும்.

உடன்றோர்  வருபகை  பேணார் ஆர்எயில் உளப்பட-புறத்தோன்
அகத்தோன்மேல்    வந்துழி    அவன்   பகையினைப்   போற்றாது
அகத்தோன் இகழ்ந்திருத்தற்கு அமைந்த மதிலரண் கூறுத லகப்பட;

உ-ம்:

‘‘மொய்வேற் கையர் முரண்சிறந் தொய்யென
வையக மறிய வலிதலைக் கொண்ட
தெவ்வழி யென்றி வியன்றார் மார்ப
வெவ்வழி யாயினு மவ்வழித் தோன்றித்
திண்கூ ரெஃகின் வயவர்க் காணிற்
புண்கூர் மெய்யினுரா அய்ப் பகைவர்
பைந்தலை யுதைத்த மைந்துமலி தடக்கை
யாண்டகை மறவர் மலிந்துபிறர்
தீண்டல் தகாது வேந்துறை யரணே’’  
                             (தகடூர் யாத்திரை)

இஃது அகத்தோன் செல்வம்  போற்றுதற்கு ஏதுவாகிய  முழுவரண்
கூறுதலிற் செல்வத்துள் அடங்காதாயிற்று.

இது பொன்முடியார் தகடூரின் தன்மை கூறியது.

சொல்லப்பட்ட நாலிருவகைத்தே -  மேலிரு  நால்வகைத்  தென்று
சொல்லப்பட்ட இருநான்கு பகுதியதாம் உழிஞைத் திணை எ-று.

முற்கூறிய   தொகையேயன்றி    ஈண்டுந்    தொகை   கூறினார்.
அந்நாலிரண்டுமேயன்றி    அவைபோல்வனவும்   நாலிரண்டு   துறை
தோன்று மென்றற்கு. அவை புறத்து வேந்தன் தன் து