நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   3201
Zoom In NormalZoom Out


என்றாற்போல   ஏறு   தழுவினாற்கு   உரியள்   இவளென   வந்த
கைக்கிளைகளெல்லாம் முல்லைக்கலி பலவற்றுள்ளுங் காண்க.

‘முன்னைய மூன்றுங் கைக்கிளைக்  குறிப்பே’  (105)  என்பதனான்
அவை கைக்கிளையாயின.

இனி ‘‘எழின்மருப் பெழில்வேழம்’’  (கலி.138)  என்றது முதலிய
நாலு பாட்டும் ஏறிய மடற்றிறமான (51) பெருந்திணை. என்னை?

‘‘மாமேலே னென்று மடல்புணையா நீந்துவேன்
தேமொழி மாத ருறாஅ துறீஇய
காமக் கடலகப் பட்டு’’                    
(கலி.139)

என்றாற் போல்வன வருதலின்.

‘‘புரிவுண்ட புணர்ச்சி’’ (கலி.142) என்றது முதலிய ஆறு பாட்டுந்
தேறுதலொழிந்த   காமத்து  மிகுதிறமாகிய  பெருந்திணை.  இவற்றை
நெய்தலுட்  கோத்தார்,  சாக்காடு  குறித்த  இரங்கற் பொருட்டாகலின்.
கூனுங்  குறளும்  உறழ்ந்து  கூறும் பெருந்திணையும் (கலி.94) ஊடற்
பகுதியவாகலின் மருதத்துட் கோத்தார்.

‘‘கல்லாப் பொதுவனை நீமாறு’’               (கலி.112)

எனப் பொதுவியர் கூறலும்,

‘‘நடா அக்கரும்பமன்ற தோளாரைக் காணின்
விடாஅலோம் பென்றா ரெமர்’’            
(கலி.112)

எனப்     பொதுவர்     கூறலும்    மிக்க    காமத்து  மிடலாகிய
பெருந்திணையாகலின் முல்லையுட் கோத்தார்.

‘‘நறவினை வரைந்தார்’’ (99) ‘‘ஈண்டு நீர்மிசை’’ (100) என்னுங்
கலிகளுங்  காமத்து  மிகுதிறத்தான்  அரசனை  நோக்கிச்  சான்றோர்
கூறிவாகலின் மருதத்துக் கோத்தார்.

இனி,

‘‘வான மூர்ந்த வயங்கொளி மண்டிலம்
நெருப்பெனச் சிவந்த வுருப்பவி ரங்காட்டு’’  
(அகம்.11)

எனக் காடுறை யுலகத்துப் பாலை வந்தது.

‘‘தொடங்கற்கட் டோன்றிய முதியவன் முதலாக
வடங்காதார் மிடல்சாய வமரர்வந் திரத்தலின்
மடங்கல்போற் சினைஇ மாயஞ்செ யவுணரைக்
கடந்தடு முன்பொடு முக்கண்ணான் மூவெயிலு
முடன்றக்கான் முகம்போல வொண்கதிர் தெறுதலிற்
சீறருங் கணிச்சியோன் சினவலி னவ்வெயி
லேறுபெற் றுதிர்வனபோல் வரைபிளந் தியங்குந
ராறுகெட விலங்கிய வழலவி ராரிடை
மறப்பருங் காத லிவளீண் டொழிய
விறப்பத் துணிந்தனிர் கேண்மின்மற் றைஇய’’   
(கலி.2)

இது மைவரை யுலகத்துப் பாலை வந்தது.

‘‘மறந்தவ ணமையா ராயினும்’’  (37)  என்னும்  அகப்பாட்டுள்
தீம்புனலுலகத்துப்  பாலை வந்தது. ‘‘அருளி  லாளர் பொருள் வயி
னகல’’
  (அகம்.305)  என்னும்  அகப்பாட்டினுட்  பெருமணலுகத்துப்
பாலை வந்தது.

இன்னும்     பிறவுஞ் சான்றோர் செய்யுட்கண்ணே உரிப் பொருள்
மயங்கியுங்   காலங்கள்   மயங்கியும்   வருவனவெல்லாம்  இதனான்
அமைத்துக் கொள்க.

உரிப்பொருளாவன
 

14. புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல்
ஊடல் இவற்றின் நிமித்தம் என்றிவை
தேருங் காலைத் திணைக்குரிப் பொருளே
 

இதுவும்  மேனிறுத்த முறையானன்றியும் அதிகாரப்பட்டமை கண்டு
உரிப்பொருள் கூறுகின்றது, உரிப்பொருள்