நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   4920
Zoom In NormalZoom Out


றைப் பறவை
யிறையுற வோங்கிய நெறியயன் மராஅத்த
பிள்ளை யுள்வாய்ச் செரீஇய
விரைகொண் டவையும் விரையுமாற் செலவே’’  (குறுந்.92)

இஃது இரங்கனிமித்தம்.

‘‘தருக்கேம் பெருமநின் னல்கல் விருப்புற்றுத்
தாழ்ந்தாய்போல் வந்து தகவில செய்யாது
சூழ்ந்தவை செய்துமற் றெம்மையு முள்ளுவாய்
வீழ்ந்தார் விருப்பற்றக் கால்’’               (கலி.69)

இஃது ஊடல்.

‘‘பரியுடை நன்மான் பொங்குளை யன்ன
வடைகரை வேழம் வெண்பூப் பகருந்
தண்டுறை யூரன் பெண்டிர்
துஞ்சும் யாமத்துந் துயிலறி யலரே.’’        (ஐங்குறு.13)

இஃது ஊடனிமித்தம்.

பிறவும்  வேறுபட  வருவனவெல்லாம் அறிந்து  இதன்கண் அடக்கிக்
கொள்க.                                               (14)

பாலைக்கட் குறிஞ்சியும் நெய்தலும் மயங்குதல்
 

15. கொண்டுதலைக் கழியினும் பிரிந்தவ ணிரங்கினும்
உண்டென மொழிப ஓரிடத் தான.
 

இது   முற்கூறிய  ஐந்தனுட் பாலைக்கட்  குறிஞ்சி  மயங்குமாறும்
நெய்தன் மயங்குமாறுங் கூறுகின்றது.

(இ-ள்)     கொண்டு  தலைக்கழியினும்,  தலைவன்  தலைவியை
உடன்கொண்டு  அவள்  தமரிடத்து நின்று பிரியினும்; பிரிந்து அவண்
இரங்கினும்  -  தலைவன் உடன்கொண்டு போகாது தானே போதலின்
தலைவி   மனையின்கண்   இருந்து   இரங்கினும்;   ஓரிடத்தான  -
இவ்விரண்டும்   ஓரிடத்தின்கண்ணே   ஓரொழுக்கமாயின; உண்டென
மொழிப  -  இவ்வொழுக்கந்தான்  நான்கு  வருணத்திலும் வேளாண்
வருணத்திற்கு உண்டென்று சொல்லுவர் ஆசிரியர் எ-று.

கொண்டு     தலைக்கழிதலான்     இடையூறின்றிப்    புணர்ச்சி
நிகழுமெனினும், பிரிவு நிகழ்ந்தவா றென்னையெனின்.

‘‘இடைச்சுர மருங்கி னவடம ரெய்திக்
கடைக்கொண்டு பெயர்த்தலிற் கலங்கஞ ரெய்தி’’
                               (தொல். பொருள். 41)

என     மேலே   கூறுவாராதலின்  தலைவிதந்தையுந்  தன்னையருந்
தேடிப்  பின்  வந்து இவ்வொழுக்கத்திற்கு இடையூறு செய்வரென்னுங்
கருத்தே இருவருள்ளத்தும் பெரும்பா