நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   4926
Zoom In NormalZoom Out


ணறும் பொய்கையும்; ஊர், உர்க ளென்பனவேயாம்.

நெய்தற்கு உணா, மீன்விலையும் உப்புவிலையும்; மா, உமண் பகடு
போல்வன;  முதலையுஞ்  சுறாவும் மீனாதலின் மாவென்றல் மரபன்று;
மரம்,  புன்னையும்  ஞாழலுங் கண்டலும்; புள் அன்னமும் அன்றிலும்
முதலியன;  பறை,  மீன்  கோட்பறை;  செய்தி, மீன்படுத்தலும் உப்பு
விளைத்தலும்   அவை   விற்றலும்;   யாழ்   நெய்தல்யாழ்.   பிறவு
மென்றதனான்,   பூ   கைதையும்   நெய்தலும்;  நீர்,  மணற்கிணறும்
உவர்க்குழியும்; ஊர், பட்டினமும் பாக்கமும்.

இனிப்  பாலைக்கு உணா, ஆறலைத்தனவுஞ் சூறைகொண்டனவும்;
மா   வலியழிந்த  யானையும்  புலியுஞ்  செந்நாயும்;  மரம்,  வற்றின
இருப்பையும்   ஓமையும்   உழிஞையும்  ஞெமையும்;  புள்,  கழுகும்
பருந்தும்  புறாவும்;  பறை, சூறைகோட்பறையும் நிரை கோட்பறையும்;
செய்தி, ஆறலைத்தலுஞ்  சூறைகோடலும்;  யாழ்,  பாலையாழ். பிறவு
மென்றதனான்;    பூ,    மராவுங்    குராவும்    பாதிரியும்;    நீர்,
அறுநீர்க்கூவலுஞ்சுனையும்; ஊர், பறந்தலை.

இன்னும்  ‘பிறவு’  மென்றதனானே இக் கூறியவற்றிற்குரிய மக்கள்
பெயருந் தலைமக்கள் பெயருங் கொள்க. ‘அவை பெயரும் வினையும்’
(20)   என்னுஞ்   சூத்திரத்துட்   காட்டுதும்.   பிறவு  மென்றதனாற்
கொள்வன, சிறுபான்மை திரிவுபடுதலிற், பிறவு மென்று அடக்கினார்.

ஒருநிலக் கருப்பொருள் ஒழிந்த நிலத்து மயங்குதல்
 

19. எந்நில மருங்கிற் பூவும் புள்ளும்
அந்நிலம் பொழுதொடு வாரா வாயினும்
வந்த நிலத்தின் பயத்த வாகும்.
 

இது முற்கூறிய கருப்பொருட்குப் புறனடை.

(இ-ள்)     எந்நில    மருங்கிற்   பூவும்   புள்ளும்-எழுதிணை
நிகழ்ச்சியவாகிய   நால்வகை   நிலத்தும்  பயின்ற  பூவும்  புள்ளும்;
அந்நிலம் பொழுதொடு வாரா ஆயினும்-தத்தமக்கு உரியவாகக் கூறிய
நிலத்தொடுங் காலத்தொடும் நடவாமற்பிற நிலத்தொடுங் காலத்தொடும்
நடப்பினும்; வந்த நிலத்தின் பயத்த ஆகும் - அவை வ