நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   4984
Zoom In NormalZoom Out


முகம்     போல   என்ற   ஏனை  யுவமம், தாமரைமலர் பனிவாரத்
தளைவிடுமென்ற  உள்ளுறை யுவமத்தைத் தருகின்ற  கருப்பொருட்குச்
சிறப்புக் கொடுத்து நின்றது.

இஃது,

‘‘உடனுறை யுவமஞ் சுட்டுநகை சிறப்பெனக்
கெடலரு  மரபி  னுள்ளுறை  யைந்தே’’

                       (தொ. பொ. பொருளியல் 42)

என்ற      பொருளியற் சூத்திரத்திற்  சிறப்பென்ற   உள்ளுறை. இவ்
வேனையுவமம்  உள்ளுறையுவமத்திற்குச்  சிறப்புக்கொடுத்து உள்ளுறை
யுவமம்போலத் திணையுணர்தலைத் தள்ளாது நின்றவாறு காண்க.

இஃது,

‘‘இனிதுறு கிளவியுந் துனியுறு கிளவியு
முவம மருங்கிற் றோன்று மென்ப’’
                          
(தொல். பொ. உவ. 28)

என    உவமப்போலிக்குக்   கூறுதலின்   அவ்விரண்டுந்   தோன்றி
நின்றது.

‘‘ஏனோர் கெல்லா மிடம்வரை வின்றே’’
                           (தொல். பொ. உவ. 27)

என்று     உவமப்போலியிற்     கூறுதலாற்     காமக்கிழத்தியும்
உள்ளுறையுவமங் கூறினாள்.

குறிஞ்சியிலும்    மருதத்திலும்    நெய்தலிலும்    இவ்வாறு   வரும்
கலிகளும்,

‘‘யானே ஈண்டை யேனே யென்னலனே
யேனல் காவலர் கவணொடு வெரீஇக்
கான யானை கைவிடு பசுங்கழை
மீனெறி தூண்டிலி னிவக்கும்
கானக நாடனோ டாண்டொழிந் தன்றே’’
      (குறுந்.54)

என்னும்     இக் குறுந்தொகைபோல வருவனவும் இச் சூத்திரத்தான்
அமைக்க.  பேராசிரியரும் இப்பாட்டின் ‘மீனெறி தூண்டி’லென்றதனை
ஏனையுவமமென்றார்.

இனித்   தள்ளாதென்றதனானே,   ‘‘பாஅ லஞ்செவி’’   என்னும் பாலைக்கலியுட் (5) டாழிசை   மூன்றும்   ஏனையுவமமாய்     நின்று கருப்பொருளொடு   கூடிச்   சிறப்பியாது   தாமே  திணைப் பொருள் தோன்றுவித்து நிற்பன  போல்வனவுங், ‘‘கரைசேர் வேழங் கரும்பிற் பூக்குந் துறைகே ழூரன்’’ (ஐங்குறு.12) என்றாற் போலக் கருப்பொருள் தானே உவமமாய் நின்று உள்ளுறைப்   பொருள் தருவனவும், பிறவும் வேறுபட வருவனவும் இதனான் அமைக்க.  இது  புறத்திற்கும்  பொது. இதனான் உள்ளுறையுவமமும், ஏனையுவமமு மென உவமம் இரண்டே யென்பது கூறினார்.                                      (46)

உள்ளுறையுவமம் தெய்வம் நீங்கலான ஏனைய
கருப்பொருளிடமாகப் பிறத்தல்