நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   4987
Zoom In NormalZoom Out


கூறாத       மருத்தத்திணைப்         பொருட்கு     உவமமாய்க்
கேட்டோனுள்ளத்தே விளக்கி நின்றவாறு காண்க.

பிறவும் இவ்வாறு வருவன வெல்லாம் இதனான் அமைக்க.   இங்ஙனங்
கோடலருமை நோக்கித் ‘துணிவொடு     வரூஉந்துணி   வினோர்
கொளினே’
(தொல். பொ. உவ. 23) என்றார்.

ஏனை உவமம் இதுவெனல்
 

49. ஏனை யுவமந் தானுணர் வகைத்தே.
இஃது ஒழிந்த உவமங் கூறுகின்றது.
 

(இ-ள்.) ஒழிந்த உவமம் உள்ளத்தான் உணரவேண்டாது சொல்லிய
சொற்றொடரே பற்றுக்கோடாகத்  தானே உணரநிற்குங்  கூறுபாட்டிற்று
எ-று.

பவளம்போலும் வாய் என்றவழிப் பவளமே கூறி வாய் கூறாவிடின்
உள்ளுறையுவமமாம்.   அவ்வாறின்றி  உவமிக்கப்படும்  பொருளாகிய
வாயினையும்     புலப்படக்    கூறலின்    ஏனையுவம    மாயிற்று.
அகத்திணைக்கு  உரித்தல்லாத  இதனையும் உடன் கூறினார். உவமம்
இரண்டல்லதில்லையென வரையறுத்தற்கும், இதுதான் உள்ளுறை தழீஇ
அகத்திணைக்குப் பயம்பட்டு வருமென்றற்கும்.                 (49)

கைக்கிளைக்குச் சிறந்தபொருள் இதுவெனல்
 

50.காமஞ் சாலா விளமை யோள்வயின்
ஏமஞ் சாலா இடும்பை எய்தி
நன்மையுந் தீமையும் என்றிரு திறத்தான்
தன்னோடும் அவளொடுந் தருக்கிய புணர்த்துச்
சொல்லெதிர் பெறாஅன் சொல்லி இன்புறல்
புல்லித் தோன்றுங் கைக்கிளைக் குறிப்பே.
 

இது    முன்னர் அகத்திணை ஏழென நிறீஇ, அவற்றுள் நான்கற்கு
நிலங்கூறிப்,   பாலையும்   நான்கு   நிலத்தும்   வருமென்று   கூறி,
உரிப்பொருளல்லாக்    கைக்கிளை   பெருந்திணையும்   அந்நிலத்து
மயங்கும்  மயக்கமுங்  கூறிக்,  கருப்பொருட்பகுதியும் கூறிப், பின்னும்
பாலைப்பொருளாகிய    பிரிவெல்லாங்     கூறி,    அப்பகுதியாகிய
கொண்டுதலைக்கழிவின்கட்    கண்ட     கூற்றுப்பகுதியுங்     கூறி,
அதனோடொத்த   இலக்கணம்  பற்றிப்   முல்லை  முதலியவற்றிற்கு
மரபுகூறி,  எல்லாத்திணைக்கும்  உவமம்  பற்றிப்  பொருள்  அறியப்
படுதலின்     அவ்வுவமப்பகுதியுங்    கூறி,    இனிக்கைக்கிளையும்
பெருந்திணையும்    இப்பெற்றிய    வென்பார்.   இச்சூத்திரத்தானே
கைக்கிளைக்குச் சிறந்த பொருள் இது வென்பது உணர்த்துகின்றார்.

(இ-ள்.)  காமம் சாலா இளமையோள் வயின் - காமக் குறிப்பிற்கு
அமைதியில்லாத இளமைப் பிராயத்தாள் ஒருத்தி