நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5023
Zoom In NormalZoom Out


ஏகவேண்டுதலிற்       குடைநாட்கோளும்         வாணாட்கோளும்
இன்றியமையாதன   அன்மையின்   ஈண்டுக்   கூறாராயினார்.  அவை
உழிஞைக்குக் கூறுப, அதற்கு இன்றியமையாமையின்.

இனித்     துணைவந்த வேந்தருந் தாமும் பொலிவெய்திய ‘பாசறை
நிலை’  கூறலும்,  அவர் வேற்றப்புலத்திருத்தலின்  ஆண்டு வாழ்வோர்
பூசலிழைத்து  இரிந்தோடப்  புக்கிருந்த நல்லிசை வஞ்சி  முதலியனவும்
‘வயங்கலெய்திய பெருமை’ப் பாற்படும்.

‘துணைவேண்டாச் செருவென்றி’ (புறம்.16) நாடக வழக்கு; துணை
வேண்டுதல் உலகியல்வழக்கு. ‘‘நீயே புறவினல்ல லன்றியும் பிறவும்’’
(46)  என்னும் புறப்பாட்டும் ‘‘வள்ளியோர்ப் படர்ந்து’’ (47) என்னும்
புறப்பாட்டும்    முதலியன    ‘துணைவஞ்சி’   என்பார்க்கு   அவை
மேற்செலவின்கண்        அடங்காமையிற்          பாடாண்டிணை
யெனப்படுமென்றுரைக்க.

இனி      மேற்செல்வான்  மீண்டு  வந்து  பரிசில்  தருமென்றல்
வேத்தியலன்றாகலிற்    பரிசிலர்க்குக்    கொடுத்தலும்    படைக்கல
முதலியவற்றொடு கூறினார்.

இனிக்     கடிமரந்தடிதலுங், களிறும் மாவுந் துறைப்படிவனவற்றைக்
கோறலும்,  புறஞ்சேரியைச்  சுடுதலும் முதலியனவும்  அடுத்தூர்ந்தட்ட
கொற்றத்தின்பாற்படும்.  அவை  கருவூரிடைச்  சேரமான்  யானையை
யெறிந்தாற் போல்வன.

இனிப்     புண்பட்டோரை     முன்னர்ச்செய்த  படைவலங்கூறி
அரசராயினும்     உழையராயினும்     புகழ்வன     போல்வனவுந்
தழிஞ்சிப்பாற்படும்.   இதனை  முதுமொழிவஞ்சி  என்பர்.  ஆண்டுக்
கொடுத்தல்   முற்கூறிய   கொடையாம்.   இத்தழிஞ்சியை  ‘அழியுநர்
புறக்கொடை  அயில்வா  ளோச்சாக்  -  கழிதறு  கண்மை  (புற. வெ.
வஞ்சி.20)யெனின்,   அஃது   ஒருவன்   றாங்கிய  பெருமைப்பாற்படு
மென்றுணர்க.

இச்  சூத்தரத்து ஆன் எல்லாம் இடைச்சொல்.   இது  செவ்வெண்
உம்மை எண்ணினை இடையிட்டுக் கொண்டது.

இனி  ஏனையவற்றிற்கும்  ஆன்  உருபு  கொடுத்து  அதற்கேற்பப்
பொருள் கூறலும் ஒன்று.