நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5075
Zoom In NormalZoom Out


உறுநிலையாகப்   பெறுகின்ற பகுதியை யாராய்ந்து பெறுதற்குப் பட்ட
விழுப்புண்  தீர்ந்து  வாழும்  வாழ்க்கை  நிலையின்மையின் அதனை
வேண்டாது புண்ணைக் கிழித்து இறக்கும் மறக்காஞ்சியானும்;

இது  யாக்கை நிலையின்மையை நோக்கிப் புகழ்பெறுதல் குறித்தது.
இதனை    வாகைத்திணைப்   பின்னர்   வைத்தார்;   இக்காஞ்சியும்
வாகையொடு மயங்கியுங் காஞ்சியாதல் பற்றி.

உ-ம்:

‘‘பொருது வடுப்பட்ட யாக்கை நாணிக்
கொன்று முகந்தேய்ந்த வெஃகந் தாங்கிச்
சென்று களம்புக்க தானை தன்னொடு
முன்மலைந்து மடிந்த வோடா விடலை
நடுக னெடுநிலை நோக்கி யாங்குத்தன்
புண்வாய் கிழித்தனன் புகழோ னந்நிலைச்
சென்றுழிச் செல்க மாதோ வெண்குடை
யரசுமலைந்து தாங்கிய களிறுமடி பறந்தலை
முரண்கெழு தெவ்வர் காண
விவன்போ லிந்நிலை பெறுகயா னெனவே’’

இது  போர்  முடிந்த பின் களம்புக்கு நடுகல் ஆயினானைக் கண்டு
உடம்பினது   நிலையின்மையினையும்  பண்புற  வருதலையும் நோக்கி
இறந்தமை கூறலிற் காஞ்சியாயிற்று.

ஏமச்  சுற்றம்   இன்றிப்   புண்ணோற்   பேஎய் ஓம்பிய பேஎய்ப்
பக்கமும்  -  கங்குல்  யாமத்துக் காத்தற்குரிய  சுற்றக்குழாமின்மையின்
அருகு   வந்து   புண்பட்டோனைப்   பேய்தானே   காத்த   பேய்க்
காஞ்சியானும்;

பேய்   காத்ததென்றலின்   ஏமம்  இரவில்  யாமமாயிற்று.  ஏமம்
காப்புமாம்.  ஓம்புதலாவது அவனுயிர் போந்துணையும் ஓரியும் நரியுங்
கிடந்தவன் தசையைக் கோடலஞ்சிப் பாதுகாத்தலாம்.

இது   சுற்றத்தாரின்மை   கூறலிற்  செல்வ   நிலையாமையாயிற்று.
‘பக்க’மென்றதனாற்  பெண்டிர்  போலவார்  காத்தலும்  பேயோம்பாத
பக்கமுங் கொள்க.

உ-ம்:

‘‘புண்ணனந்த ருற்றானைப் போற்றுந ரின்மையிற்
கண்ணனந்த ரில்லாப்பேய் காத்தனவே - யுண்ணு
முளையோரி யுட்க வுணர்வொடு சாயாத
விளையோன் கிடந்த விடத்து’’

என வரும்.

ஏனைய வந்துழிக் காண்க.

இன்னன்  என்று  இரங்கிய  மன்னையானும்  - ஒருவன் இறந்துழி
அவன்    இத்தன்மையோனென்று   ஏனையோர்  இரங்கிய   கழிவு
பொருட்கண் வந்த மன்னைக் காஞ்சியானும்;

இது பலவற்றின் நிலையாமை கூறி