நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5081
Zoom In NormalZoom Out


என வரும்.

நனிமிகு   சுரத்திடைக்   கணவனை  இழந்து  தனிமகள் புலம்பிய
முதுபாலையும்,  மிகுதி  மிக்க  அருநிலத்தே  தன்  கணவனை இழந்து
தனித்த  தலைமகள்  தன்  தனிமையை  வெளிப்படுத்தின  முதுபாலை
யானும்;

‘புலம்பிய’   வெனவே    அழுதல்   வெளிப்படுத்தல்    கூறிற்று.
பாலையென்பது பிரிவாகலின், இது பெரும்பிறிதாகிய பிரிவாதல் நோக்கி
முதுபாலை  யென்றார்.  ‘நனிமிகு  சுர’மென்று  இருகால்  அதனருமை
கூறவே, பின்பனிப் பிரிவு அதற்குச் சிறந்த தன்றாயிற்று.

இதுவும் இன்பமும் செல்வமும் ஒருங்கு நிலையின்மை கூறிற்று.

‘‘இளையரு முதியரும் வேறுபுலம் படர
வெடுப்ப வெழாஅய் மார்பமண் புல்ல
விடைச்சுரத் திறுத்த மள்ள விளர்த்த
வளையில் வறுங்கை யோச்சிக் கிளையு
ளின்ன னாயின னிளையோ னென்று
நின்னுரை செல்லு மாயின் மற்று
முன்னூர்ப் பழுனிய கோளியா லத்துப்
புள்ளார் யாணர்த் தற்றே யென்மகன்
வளனுஞ் செம்மலு மெமக்கெனநாளு
மானாது புகழு மன்னை
யாங்கா குவள்கொ லளியள் தானே’’          (புறம்.254)

என வரும்.

கழிந்தோர்  தேஎத்து அழிபடர்உறீஇ ஒழிந்தோர் புலம்பிய கையறு
நிலையும் - கணவனொடு மனைவியர் கழிந்துழி அவர்கட்பட்ட அழிவு
பொருளெல்லாம்  பிறர்க்கு  அறிவுறுத்தித்  தாம் இறந்துபடாதொழிந்த
ஆயத்தாரும்  பரிசில்  பெறும்  விறலியருந் தனிப்படருழந்த செயலறு
நிலைமையானும்;

ஒழிந்தோரென வரையாது கூறினமையிற் கழிந்தோராற் புரக்கப்படும்
அவ்விருதிறத்தாரையும்  உடன்கொள்க. கழிந்தோ ரென்ற பன்மையான்
ஆண்பாலுந்      தழீஇயினார்,      கையறுநிலை     அவரையின்றி
அமையாமையின்.   ஆண்பாற்    கையறுநிலை   மன்னைக்காஞ்சியுள்
அடங்கும். அழிவாவன புனல்விளையாட்டும்,  பொழில்  விளையாட்டுந்,
தலைவன்வென்றியும் போல்வன.

உ-ம்:

‘‘தேரோன் மகன்பட்ட செங்களத்து ளிவ்வுடம்பிற்
றீராத பண்பிற் றிருமடந்தை - வாரா
வுலகத் துடம்பிற் கொழிந்தனள் கொல்லோ
வலகற்ற கற்பி னவள்’’                     (பாரதம்)

என வரும்.

காதலி இழந்த தபுதார நிலையும் - தன் மனைவியைக் கணவனி