நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5085
Zoom In NormalZoom Out


ப்பன்று என்றுணர்க.                                     (24)

பாடாண்டிணை கைக்கிளைப் புறனாதலும்
இத்துணைப் பொருளுடைத்தாதலும்
 

80.பாடாண் பகுதி கைக்கிளைப் புறனே
நாடுங் காலை நாலிரண் டுடைத்தே.
 

இது  மேற்  புறத்திணை யிலக்கணந் திறப்படக் கிளப்பின்  (தொல்.
புறத்திணை1) என்புழிக் கிடக்கைமுறை கூறிய முறையான் இறுதி நின்ற
பாடாண்டிணைக்குப்  பொது  விலக்கணம்  உணர்த்துவான்  அதற்குப்
பெயர்  இன்ன  தெனவும், அது கைக்கிளைப் புறனாமெனவும், அஃது
இத்துணைப் பொருளுடைத்தெனவுங் கூறுகின்றது.

(இ-ள்.)  பாடாண்பகுதி  கைக்கிளைப் புறனே - பாடாணெனப்பட்ட
புறத்திணையது  கூறு கைக்கிளையென்று கூறப்பட்ட  அகத்திணைக்குப்
புறனாம்;   நாடுங்காலை   நாலிரண்டு   உடைத்து   தன்னை  நாடிச்
சொல்லுவார்  செய்யுளுண்  முடிந்த  பொருள்  பாடாணாகவே நிறுப்ப
நாடுங்காலத்து எண்வகைப் பொருளுடைத்து எ-று.

பாடாணென்பது     பாடுதல்      வினையையும்    பாடப்படும்
ஆண்மகனையும்  நோக்காது.     அவனதொழுகலாறாகிய    திணை
யுணர்த்தின மையின்   வினைத்தொகைப்புறத்துப் பிறந்த அன்மொழித்
தொகை.  ஒரு தலைவன் பரவலும் புகழ்ச்சியும் வேண்ட, ஒரு புலவன்
வீடுபேறு  முதலிய  பரிசில்  வேண்டலின் அவை தம்மின் வேறாகிய
ஒருதலைக்  காமமாகிய   கைக்கிளையோ டொத்தலிற் பாடாண்டிணை
கைக்கிளைப்    புறனாயிற்று.   வெட்சி  முதலிய திணைகளுஞ் சுட்டி
யொருவர்   பெயர்    கொடுத்துங்     கொடாதும்   பாடப்படுதலிற்
பாடாண்டினையாயினும்,   ஒருவனை   ஒன்று  நச்சிக்  கூறாமையின்,
அவர்   பெறுபுகழ்   பிறரை   வேண்டிப்    பெறுவதன்றித்  தாமே
தலைவராகப்   பெறுதலின்,  அவை   கைக்கிளைப்புறன்   ஆகாமை
உணர்க.  இவ்  விருகூறுந்  தோன்றப் ‘பகுதி’  யென்றார்.    புகழை
விரும்பிச்   சென்றோர்   வெட்சி முதலியவற்றைப்  பாடின்,  அவை
கைக்கிளைப்  புறன்  ஆகாவென உணர்க.

இதனானே   புறத்திணை ஏழற்கும் பெயரும் முறையும் ஒருவாற்றாற்
கூறினாராயிற்று.  நாலிரண்டாவன  இப்பாடாண்  டிணைக்கு  ஓதுகின்ற
பொருட்பகுதி   பலவும்   கூட்டி   ஒன்றும்   இருவகை   வெட்சியும்
பொதுவியலும்    வஞ்சியும்   உழிஞையுந்   தும்பையும்    வாகையுங்
காஞ்சியுமாகிய பொருள்கள் ஏழுமாகிய எட்டுமாம்.

இனி   இக்கூறிய  ஏழு திணையும் பாடாண்டிணைப் பொருளாமாறு
‘காட்டுங்கால்  எல்லாத்  திணையும்  ஒத்தவாயினும்,  அவை  பெரும்
பான்மையுஞ்  சிறுபான்மையுமாகி வருதலும்  இவை  இரண்டும் பலவும்
ஒருங்கு  வருதலும் பாடாண்டிணைக்கு மேற்கூறும் பொருளும்  விராய்
வருதலுமாமென்று உணர்க.

உ-ம்:

‘‘முனைப்புலத்து