நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5094
Zoom In NormalZoom Out


85.ஊரொடு தோற்றமு முரித்தென மொழிப.
 

இது புரைதீர் காமத்திற்கன்றிப்  பக்குநின்ற  காமத்திற்குப் புறனடை
கூறுகின்றது.

(இ-ள்.)  பக்குநின்ற  காமம்  ஊரிற்  பொதுமகளிரொடு  கூடிவந்த
விளக்கமும் பாடாண்டிணைக்கு உரித்தென்று கூறுவர் ஆசிரியர் எ-று.

‘தோற்றமு’மென்றது,   அக்காமந்   தேவரிடத்தும்  மக்களிடத்தும்
விளங்கும்   விளக்கத்தை.  அது  பின்னுள்ளோர்  ஏழு  பருவமாகப்
பகுத்துக் கலிவெண்பாட்டாகச் செய்கின்ற உலாச் செய்யுளாம்.

இச்  சூத்திரத்திற்குத் தலைவர் பிறந்த ஊரும் அவர் பிறப்புமென்று
பொருள் கூறின், மரபியற்கண்ணே ‘ஊரும் பெயரும்’ (தொல். மரபியல்
27)  என்னும் சூத்திரத்து ஊர்பெறுதலானும், முன்னர் ‘வண்ணப்பகுதி’
(தொல்.  புறம்.  27) என்பதனாற் பிறப்புப் பெறுதலானும் இது கூறியது
கூறலாமென்றுணர்க.                                      (30)

மேற்கூறிய ஐந்து சூத்திரங்கட்கும் புறனடை
 

86.வழக்கொடு சிவணிய வகைமை யான.
 

இது  ‘அமரர்கண்  முடியும்’ (தொல். புறம்.26)  என்னுஞ்  சூத்திர
முதலியவற்றுக்கெல்லாம் புறனடை.

(இ-ள்.) கடவுள் வாழ்த்தும் அறுமுறை வாழ்த்தும் முதலாக ஊரொடு
தோற்ற     மீறாகக்     கிடந்தனவெல்லாஞ்    சான்றோர்    செய்த
புலனெறிவழக்கோடே     பொருந்திவந்த     பகுதிக்கண்ணேயான
பொருள்களாம் எ-று.

எனவே, புலனெறிவழக்கின் வேறுபடச் செய்யற்க என்பது கருத்து.

கடவுள்  வாழ்த்துப்  பாடுங்கான்  முன்னுள்ளோர்  பாடியவாறன்றி
முப்பத்துமூவருட் சிலரை விதந்து வாங்கிப் பாடப்பெறாது.

இனி     அறுமுறைவாழ்த்துப்     பாடுங்கால்   முன்னுள்ளோர்
கூறியவாறன்றி ஆவிற்கினமாகிய எருமை முதலியனவும் வாழ்த்தப்படா.

இனிப்  புரைதீர்  காமம்  புல்லிய   வகையும்   ஒருவன்றொழுங்
குலதெய்வத்தை நோக்கியன்றி வரைவின்றிக் கூறப்படாது.

இனிச்  செந்துறைப்பாடாண்பாட்டு  முன்னுள்ளோர் கூறியவாறன்றி
இறப்ப இழித்தும் இறப்ப உயர்த்தும் கூறப்படாது.

இனிக் காமப்பகுதிக் கடவுளரைக் கூறுங்காலும் பெண்டெய்வத்தோடு
இயல்புடையாரை