அல்லவே, இஃது ஓர் அமளிக்கண் துயிலப்பெற்றும்
வேதவிதிபற்றிக் கூட்டம் நிகழாமையாற் பிறந்த மிக்க வேறுபாடன்றோ?
இதனை இவளே ஆற்றுவதன்றியான் ஆற்றுவிக்குமாறென்னை
என்றாளென்க.
அற்றம் அழிவு உரைப்பினும் - களவுக்காலத்துட்பட்ட வருத்தம்
நீங்கினமை கூறினும்:
“ஏக்கர் ஞாழ லிகந்துபடு பெருஞ்சினை
வீயினிது கமழுந் துறைவனை
நீயினிது முயங்குமதி காத லோயே” (ஐங்குறு.148)
“எரிமருள் வேங்கை யிருந்த தோகை
யிழையணி மடந்தையிற் றோன்று நாட
இனிதுசெய் தனையால் நுந்தை வாழியர்
நன்மனை வதுவை யயரவிவள்
பின்னிருங் கூந்தன் மலரணிந் தோயே.” (ஐங்குறு.294)
என வரும்.
அற்றம் இல்லாக் கிழவோட் சுட்டிய தெய்வக் கடத்தினும் - களவொழுக்கம் புலப்பட ஒழுகுதல் இல்லாத தலைவியைத்
தலைவன் வரைந்து கோடல் குறித்துப் பரவிய தெய்வம் அதனை
முடித்தலின் அப்பரவுக்கடன் கொடுத்தல் வேண்டுமெனத் தலைவற்குக்
கூறும் இடத்தும்:
உ-ம்:
“நெஞ்சொடு மொழிகடுத் தஞ்சுவர நோக்குந்
தாயவட் டெறுவது தீர்க்க வெமக்கெனச்
சிறந்த தெய்வத்து மறையுறை குன்றம்
மறைந்துநின் றிறைஞ்சினம் பலவே
பெற்றனம் யாமே மற்றதன் பயனே.”
‘கிழவோற் சுட்டிய தெய்வக்கடம்’ என்று பாடம் ஓதி
“வாழி யாதன் வாழி யவினி
வேந்துபகை தணிக யாண்டுபல நந்துக
எனவேட் டோளே யாயே யாமே
மலர்ந்த பொய்கை முகைந்த தாமரைத்
தண்டுறை யூரன் வரைக
எந்தையுங் கொடுக்க வெனவேட் டேமே” (ஐங்குறு.6)
என்பது உதாரணங் காட்டுவாரும் உளர்.
சீருடைப் பெரும்பொருள் வைத்தவழி மறப்பினும் -தலைமை யுடைய இல்லறத்தைத் தலைவிமாட்டு வைத்தகாலத்துத் தலைவன்
அறஞ் செயற்கும் பொருள் செயற்கும் இசையுங் கூத்துமாகிய இன்பம்
நுகர்
|