பல வாயில்களை மறுத்த தலைவி தனக்கு வாயில் நேர்ந்தமை
தோழிக்கு விறலி கூறியது. (11)
செவிலி கூற்று இவை எனல்
153. கழிவினும் வரவினும் நிகழ்வினும் வழிகொள
நல்லவை யுரைத்தலும் அல்லவை கடிதலுஞ்
செவிலிக் குரிய வாகு மென்ப.
இது, செவிலி கூற்று உணர்த்துகிறது.
(இ-ள்.) கழிவினும் வரவினும் நிகழ்வினும் வழிகொள -
மூன்று காலத்துந் தத்தங் குலத்திற்கு ஏற்கும்படியாக; நல்லவை
உரைத்தலும் - முற்கூறிய கற்பு முதலிய நல்லவற்றைக் கற்பித்தலும்;
அல்லவை கடிதலும் - காமநுகர்ந்த இன்பமாகிய கற்பிற்குத்
தீயவற்றைக் கடிதலும்; செவிலிக்கு உரிய ஆகும் என்ப - செவிலித்
தாய்க்கு உரியவாகுமென்று கூறுவர் புலவர் எ-று.
“கட்கினியாள் காதலன் காதல் வகைபுனைவாள்
உட்குடையாள் ஊராண் இயல்பினாள் - உட்கி
இடனறிந்து ஊடி இனிதின் உணரும்
மடமொழி மாதராள் பெண்.” (நாலடி.384)
கட்கினியாள், இது காமம்; வகைபுனைவாள், இது கற்பு;
உட்குடையாள், இஃது ஒழுக்கம் ; ஊராண்மை, இது சுற்றமோம்பல்;
ஊடியுணர்தல், அல்லவை கடிதல்.
“நாலாறும் ஆறாய் நனிசிறிதாய் எப்புறனும்
மேலாறும் மேலுரை சோரினும் - மேலாய
வல்லாளாய் வாழுமூர் தற்புகழும் மாண்கற்பின்
இல்லாள் அமர்ந்ததே யில்.” (நாலடி.383)
என்னும் வெண்பா விருந்துபுறந்தருதல் கூறியதுமாம்.
இனி ‘ஆகு’ மென்றதனானே செவிலி நற்றாய்க்கு
உவந் துரைப்பனவுங் கொள்க.
“கானங் கோழிக் கவர்குரற் சேவல்
நுண்பொறி யெருத்திற் றண்சித ருறைப்பப்
புதனீர் வாரும் பூநாறு புறவிற்
சீறூ ரோளே மடந்தை வேறூர்
வேந்துவிடு தொழிலொடு செல்லினுஞ்
சேந்துவர லறியாது செம்மல் தேரே.” (குறுந்.242)
“மறியிடைப் படுத்த மான்பிணை போலப்
புதல்வன் நடுவண னாக நன்றும்
இனிது மன்றவவர் கிடக்கை முனிவின்றி
நீனிற வியலகங் கவைஇய
ஈனும் உம்பரும் பெறலருங் குரைத்தே.” (ஐங்குறு.401)
“வாணுதல் அரிவை மகன்முலை ஊட்டத்
தானவள் சிறுபுறங் கவையினன் நன்றும்
நறும்பூந் தண்புறவு அணிந்த
குறும்பல் பொறைய நாடுகிழ வோனே.” (ஐங்குறு.404)
இவை உவந்து கூறியன.
“பிரசங் கலந்த வெண்சுவைத் தீம்பால்
|