நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5497
Zoom In NormalZoom Out


 

பகலும் வாரலென்றது.

நன்மையும்    தீமையும்   பிறிதினைக்   கூறலும்   -   பிறிதொரு
பொருண்மேல் வைத்து நன்மையுந், தீமையுந் தலைவற்கேற்பக் கூறலும்:

“கழிபெருங் காதலர் ஆயினுஞ் சான்றோர்
பழியொடு வரூஉம் இன்பம் வெஃகார்”         (அகம்.111)

எனப் பிறர்மேல் வைத்துத்  தலைவனை அறிவுகொளுத்தினமையின்
வழுவாயமைந்தது.

“பழியொடு வரூஉ மின்பம் வெஃகார்”

எனவே    புகழொடு   வரூஉம்  இன்பம் வெஃகுவரெனக் கொள்ள
வைத்தலின் நன்மையுந் தீமையும் பிறிதின்மேல் வைத்துக் கூறிற்றாம்.

புரைபட   வந்த    அன்னவை  பிறவும்  -  வழுப்படவந்த இவை
போல்வன பிறவும்:

அவை    ஊடற்கணின்றியுந்    தலைவனைக்   கொடியனென்றலும்
நொதுமலர்   வரைகின்றாரென்றலும்    அன்னை   வெறியெடுக்கின்றா
ரென்றலும் பிறவுமாம்.

“பகையில்நோய் செய்தான்”                    (கலி.40)

என்பது ஊடற்கணின்றிக் கொடியனென்றது.

“திணையுண் கேழ லிரிய” என்னும் (119) நற்றிணையுள்,

“யாவதும் முயங்கல் பெறுகுவ னல்லன்
புலவி கொளீஇயர்தன் மலையினும் பெரிதே.”

இது நொதுமலர் வரைவு சிறைப்புறமாகக் கூறியது.

“கடம்புங் களிறும் பாடித் தொடங்குபு
தோடுந் தொடலையுங் கைக்கொண் டல்கலும்
ஆடினர் ஆதல் நன்றோ?”                  (அகம்137)

என்பது தலைவற்கு வெறியாட்டுணர்த்தியது.

வரைதல்   வேட்கைப்   பொருள   என்ப  -  தலைவன் வரைந்து
கோடற்கண்   நிகழும்   விருப்பத்தைத்   தமக்குப்  பொருளாகவுடைய
என்றவாறு.

என்றது, வழுப்படக் கூறினும் வரைவுகாரணத்தாற் கூறலின் அமைக்க
வென்றவாறாம்.                                           (16)

கைக்கிளை பெருந்திணைக்கட்படுவதொரு வழுவமைக்கின்றது

211. வேட்கை மறுத்துக் கிளந்தாங் குரைத்தல்
மரீஇய மருங்கின் உரித்தென மொழிப.

இது,    நடுவணைந்திணையல்லாத     கைக்கிளை பெருந்திணைக்
கட்படுவதொரு வழுவமைக்கின்றது.

(இ-ள்.)    வேட்கை   மறுத்து - தம் மனத்து வேட்கையை மாற்றி;
ஆங்குக் கிளந்து உரைத்தல்  -  இருவரும்  எதிர்ப்பட்டவிடத்துத் தாம்
ஆற்றின தன்மையைப் புலப்படக் கூறி ஒருவர் ஒருவர்க்கு அறிவித்