மீனிற் செறுக்கும் யாணர்ப்
பயன்றிகழ் வைப்பிற்பிற ரகன்றலை நாடே. திணை - வஞ்சி; துறை - கொற்றவள்ளை; மழபுலவஞ்சியுமாம். சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கருங்குழலாதனார் பாடியது. (இ - ள்.) களிற்றைச் செலுத்திய தாளையும், வீரக்கழலுரிஞ்சிய இலக்கணத்தாற்றிருந்திய அடியினையும், அம்பொடு பொருது (பி - ம். பொருத) இடக் கவிந்த வள்ளிய கையுடனே கண்ணிற்கு விளங்கும் அழகினையுடைய வில்லையும், திருமகள் பிறர்மார்பை மறுத்தற்கு ஏதுவாகிய பரந்த மார்பினையும், யானையைப்பெயர்த்த மிக்க வலியினையுமுடைய, பகலுமிரவும் எண்ணாது பகைவரது ஊரைச் சுடுகின்ற தீயினது ஒளியின்கண்ணே தம்சுற்றத்தை அழைத்தலுடனே அழுகின்ற கூவுதலையுடைய ஆரவாரத்தோடு கூடிய கொள்ளையை விரும்புதலுடையை; ஆதலான், நல்ல பொருள்கள் இல்லையாகுவனவால்; இயற்றப்பட்ட தேரையுடைய வளவ! குளிர்ந்த நீர்பரந்த ஓசையையுடைய உடைப்புக்களை மண்மறுத்தலான் மீனாலடைக்கும் புதுவருவாயினையுடைய பயன் விளங்கும் ஊர்களையுடைய மாற்றாரது அகன்ற இடத்தையுடைய நாடுகள் - எ - று. திருந்தடி (2) என்பதற்குப் பிறக்கிடாத அடியெனினும் அமையும். கணைபொருது (3) என்றது, அதனொடு மருவுதலை. தாளையும், அடியையும், கையுடனே சாபத்தையும், மார்பையும், முன்பையுமுடைய வளவ! நீ கொள்ளைமேவலையாதலின், யாணரையும் வைப்பினையுமுடைய பிறர்நாடு, நல்ல இல்லவாகுபவெனக் கூட்டுக. நாடு நல்ல இல்லவாகுபவென இடத்துநிகழ்பொருளின் தொழில் இடத்து மேலேறி நின்றது. இனித் தாளாலும் அடியாலும் கையாலும் சாபத்தாலும் மார்பாலும் முன்பாலும்கொள்ளைமேவலையாகலினென ஆலுருபு விரித்துரைப்பினும் அமையும். இது, பிறரகன்றலைநாடு நல்ல இல்லவாகுப வென்றமையிற் கொற்றவள்ளையும், ஊர்சுடு விளக்கத்து அழுவிளிக் கம்பலை
|