|
கொல்களிற்றாற்
காப்புடைய வெழுமுருக்கிப்
பொன்னியற் புனைதோட்டியான்
முன்புதுரந்து சமந்தாங்கவும்
பாருடைத்த குண்டகழி
நீரழுவ நிவப்புக்குறித்து
நிமிர்பரிய மாதாங்கவும்
ஆவஞ் சேர்ந்த புறத்தை தேர்மிசைச்
சாவ நோன்ஞாண் வடுக்கொள வழங்கவும்
பரிசிலர்க் கருங்கல நல்கவுங் குரிசில்
வலிய வாகுநின் றாடோய் தடக்கை
புலவுநாற்றத்த பைந்தடி
பூநாற் றத்த புகைகொளீஇ யூன்றுவை
கறிசோ றுண்டு வருந்துதொழி லல்லது
பிறிதுதொழி லறியா வாகலி னன்றும்
மெல்லிய பெரும தாமே நல்லவர்க்
காரணங் காகிய மார்பிற் பொருநர்க்
கிருநிலத் தன்ன நோன்மைச்
செருமிகு சேஎய்நிற் பாடுநர் கையே. திணை - அது; துறை - இயன்மொழி. (பாடாண்டிணை) சேரமான் செல்வக்கடுங்கோவாழியாதன் கபிலர் கைப்பற்றி, ‘மெல்லியவாமால் நுங்கை’ எனக் கபிலர் பாடியது. (இ - ள்.) வன்கண்மையை உடைய கொலையானையாலே காவலை யுடைய கணையமரத்தை முறித்து இரும்பாற் செய்யப்பட்ட அழகுசெய்த அங்குசத்தால் முன்னர்க் கடாவி அதுசெய்யும் வினையைப் பின்வேண்டு மளவிலே பிடிக்கவும், வலிய நிலத்தைக் குந்தாலியால் இடித்துச்செய்த குழிந்த கிடங்கின்கண்நீர்ப்பரப்பினது ஆழமாகிய உயர்ச்சியைக் கருதி அதன்கட் செல்லாமல் மிகைத்த செலவினையுடைய குதிரையைக் குசை தாங்கி வேண்டுமளவிலே பிடிக்கவும், அம்பறாத்தூணிபொருந்திய முதுகையுடையையாய்த் தேர்மேலே நின்று வில்லினது வலியநாணாற் பிறந்த வடுப் பொருந்தும்படி அம்பைச் செலுத்தவும், பரிசிலர்க்குப் பெறுதற்கரிய அணிகலங்களை அளிக்கவும், தலைவ! வலியவாகும் நின் முழந்தா |