புறவினது கருவாகிய முட்டைபோன்ற புல்லியநிலத்து வரகினது அரிசியைப் பாலின்கட் பெய்து அடப்பட்ட சோற்றைத் தேனோடு கலந்து உண்டு குறிய முயலினது கொழுவிய சூட்டிறைச்சியைத் தின்ற என் சுற்றத்தோடுகூட இலந்தைமரமோங்கிய அகன்ற இடத்தையுடைய பொதியிற்கண் ஒன்றனையும் மறைத்தலில்லாத உள்ளத்துடனே வேண்டிய வார்த்தைகளைப் பலகாலுங்கூறிப் பெரிய கட்டியாகிய கொழுவிய சோற்றை அருந்திய பாணர்க்கு நீங்காத செல்வமெல்லாவற்றையும் செய்தோன் எம்முடைய வேந்தனாகிய வளவன் வாழ்வானாகவென்று சொல்லி நினது பெருமை பொருந்திய வலிய தாளைப் பாடிற்றிலேனாயின், வாழ்நாட்கு அலகாகிய பலகதிரையுடைய செல்வன் தோன்றுதலறியான்; யானோ எளியேன்; பெரும! இந்தவுலகத்தின்கண் நற்குணங்களால் அமைந்தோர் செய்த நல்வினையுண்டாயின், இமயமலையின் கண்ணே திரண்டு இனிய ஓசையைப் பயிற்றிக் கீழ்காற்றான் வரும் பெரிய முகில் சொரிந்த நுண்ணிய பலதுளியினும் பலகாலம் வாழ்வாயாக - எ-று. நிலம்புடை பெயர்வதாயினும் என்பதற்கு ஊழி பெயருங்காலத்து யாவரும் செய்த இருவினையும் நீங்குதலின், அக்காலத்தும் செய்தி கொன்றோர்க்கு உய்தியில்லென்றும், நிலத்துள்ளார் யாவரும் இவர் கூற்றிலே நிற்பாராயினுமென்றும் உரைப்பாரும் உளர். |