யோர் நாடு பைதன்மாக்களொடு பெருங்கலக் குற்றன்றென ஒன்னார்நாடு அழிபிரங்கியதும் கூறுதலால், இது கொற்றவள்ளையாயிற்று. (42)
ஆனா வீகை யடுபோ ரண்ணனின்
யானையு மலையிற் றோன்றும் பெருமநின்
தானையுங் கடலென முழங்குங் கூர்நுனை
வேலு மின்னின் விளங்கு முலகத்
தரைசுதலை பனிக்கு மாற்றலை யாதலிற்
புரைதீர்ந் தன்றது புதுவதோ வன்றே
தண்புனற் பூச லல்லது நொந்து
களைக வாழி வளவ வென்றுநின்
முனைதரு பூசல் கனவினு மறியாது
புலிபுறங் காக்குங் குருளை போல
மெலிவில் செங்கோ னீபுறங் காப்பப்
பெருவிறல் யாணர்த் தாகி யரிநர்
கீழ்மடைக் கொண்ட வாளையு முழவர்
படைமிளிர்ந் திட்ட யாமையு மறைநர்
கரும்பிற் கொண்ட தேனும் பெருந்துறை
நீர்தரு மகளிர் குற்ற குவளையும்
வன்புலக் கேளிர்க்கு வருவிருந் தமரும்
மென்புல வைப்பி னன்னாட்டுப் பொருந
மலையி னிழிந்து மாக்கட னோக்கி
நிலவரை யிழிதரும் பல்யாறு போலப்
புலவ ரெல்லா நின்னோக் கினரே
நீயே, மருந்தில் கணிச்சி வருந்த வட்டித்துக்
கூற்றுவெகுண் டன்ன முன்பொடு
மாற்றிரு வேந்தர் மண்ணோக் கினையே. திணை-வாகை; துறை-அரசவாகை. அவனை அவர் பாடியது. (இ-ள்.) அமையாத வண்மையையும், பகையைக்கொல்லும் பூசலையுமுடைய தலைவ! நினது யானையும் மலைபோலத் தோன்றும்; பெரும! நின்படையும் கடல்போல முழங்கும்; கூரிய நுனையையுடைய வேலும் மின்போல விட்டுவிளங்கும்; இங்ஙனம் உலகத்தின்கண் வேந்து தலைநடுங்குதற்கு ஏதுவாகிய வலியையுடையையாதலால், குற்றம் தீர்ந்தது; அது நினக்குப் பழையதாய் வருகின்றது; குளிர்ந்த நீராலுள்ளதாகிய பூச லல்லது வருந்தி ‘எமது துயரத்தைத் தீர்ப்பாயாக வாழி வளவ!’ என்று சொல்லி, நினது முந்துற்றுச் செல்லும் படையுண்டாக்கும் பூசலைக் கனாவின்கண்ணும் அறியாது, புலி பாதுகாக்கும் குட்டிபோலக் குறைவில்லாத செவ்விய கோலால் நீ பாதுகாப்பப் பெரிய விசேடத்தையுடைய புதுவருவாயையுடைத்தாய் நெல்லறுப்பார் கடைமடைக்கட் பிடித்துக் கொள்ளப்பட்ட வாளையும், உழுவார் படைவாளால் மறிக்கப்பட்ட ஆமையும், கரும்பறுப்பார் கரும்பினின்றும் வாங்கப்பட்ட தேனும், பெரிய துறைக்கண்நீரை முகந்துகொள்ளும் பெண்டிர் பறித்த செங்கழுநீருமென இவற்றை வன்புலத்தினின்றும் வந்த சுற்
|