தற்பொருட்டாய் நின்றது.
தமிழென்பதற்குத் தமிழ்நாடெனினும் அமையும்.
குருசில்! நீ இதுசெய்தல், இசையுடையோர்க்கல்லது உறையுளின்மை
கேட்ட மாறுகொலெனக் கூட்டுக.
எண்ணென்பது கருதெனவுமாம்.
எண்ணியென்று பாடமாயின், கருதியென்க.
(51) நீர்மிகிற் சிறையு மில்லை தீமிகின்
மன்னுயிர் நிழற்று நிழலு மில்லை
வளிமிகின் வலியு மில்லை யொளிமிக்
கவற்றோ ரன்ன சினப்போர் வழுதி
தண்டமிழ் பொதுவெனப் பொறாஅன் போரெதிர்ந்து
கொண்டி வேண்டுவ னாயிற் கொள்கெனக்
கொடுத்த மன்னர் நடுக்கற் றனரே
அளியரோ வளியரவ னிளியிழந் தோரே
நுண்பல சிதலை யரிதுமுயன் றெடுத்த
செம்புற் றீயல் போல
ஒருபகல் வாழ்க்கைக் குலமரு வோரே.
திணை - வாகை; துறை - அரசவாகை. பாண்டியன் கூடகாரத்துத்
துஞ்சிய மாறன்வழுதியை ஐயூர் முடவனார் (பி - ம். ஐயூர் கிழார்)
பாடியது.
(இ - ள்.) நீர் மிகுமாயின், அதனைத்தாங்கும் அரணுமில்லை;
நெருப்பு மிகுமாயின், உலகத்து நிலைபெற்ற உயிர்களை நிழல்செய்யும்
நிழலுமில்லை; காற்று மிகுமாயின், அதனைப்பொறுக்கும் வலியுமில்லை;
விளக்கம் மிக்கு அவற்றையொத்த சினம்பொருந்திய போரையுடைய
வழுதி குளிர்ந்த தமிழ்நாடு மூவேந்தர்க்கும் பொதுவென்று
கூறப்பொறானாய்ப் போரையேற்றுத் திறையை வேண்டுவனாயின்,
கொள்க வென்றுசொல்லி முன்னே கொடுத்த மன்னர் நடுக்கந் தீர்ந்தார்;
கொடாமையின், யாவராலும் மிக இரங்கத்தக்கார், அவனது
அருளையிழந்த அரசர், நுண்ணிய பல கறையான் அரிதாக
உழந்தெடுக்கப்பட்ட செம்புற்றினின்றும் புறப்பட்ட ஈயலைப்போல
ஒருபகற்பொழுதின்கண் வாழும் உயிர்வாழ்க்கையின் பொருட்டுச்
சுழல்வோர்-எ - று.
வழுதி, தமிழ்பொதுவெனப் பொறானாய்க் கொண்டிவேண்டுவனாயின்,
கொடுத்தமன்னர் நடுக்கற்றனர்; கொடாமையின் அவன்
அளியிழந்தோர், ஒருபகல் வாழ்க்கைக்கு அலமருவோர்; ஆதலான்,
அவர் அளியரோ அளியரெனக் கூட்டி வினைமுடிவு செய்க; அவன்
அளியிழந்தோராகிய அலமருவோர் அளியரெனக் கூட்டியுரைப்பினும்
அமையும்.
அளியரோ அளியரென இரங்கற்குறிப்புத் தோன்ற அடுக்கிநின்றது.
(52) அணங்குடை நெடுங்கோட் டளையக முனைஇ
முணங்குநிமிர் வயமான் முழுவலி யொருத்தல்
ஊனசை யுள்ளந் துரப்ப விரைகுறித்துத்
தான்வேண்டு மருங்கின் வேட்டெழுந் தாங்கு
வடபுல மன்னர் வாட வடல்குறித்
தின்னா வெம்போ ரியறேர் வழுதி
இதுநீ கண்ணிய தாயி னிருநிலத்
தியார்கொ லளியர் தாமே யூர்தொறும்
மீன்சுடு புகையின் புலவுநாறு நெடுங்கொடி
வயலுழை மருதின் வாங்குசினை வலக்கும்
பெருநல் யாணரி னொரீஇ யினியே
கலிகெழு கடவுள் கந்தங் கைவிடப்
பலிகண் மா