ஆதலான், மயக்கம்பொருந்திய நெஞ்சையுடைய எங்களுக்கு
ஒருதலையாக முடியா, நினதுபுகழ் எந்நாளும்; கல்வியால்
விளக்கமுடையோர் பிறந்த இப்பெரிய இடத்தையுடைய
உலகத்தின்கண்ணே வாழேமென்றிருத்தலும் கூடாது; விரைய, பல
பொருளையும் அடக்கிய செய்யுளைச் செய்யும் செவ்விய நாவினையும்
மிக்ககேள்வியையும் விளங்கிய புகழையுமுடைய கபிலன் இன்று
உளனாகப்பெறின் நன்று; அது பெற்றிலேனென்று சொல்லிய நினது
வென்றிகொண்ட சிறப்பிற்குப் பொருந்தப் பாடுவேன், நீ பகைவரை
வென்ற வெற்றியை-எ - று.
மாடத்துமகளிர் மணலிடத்துத் தெற்றிக்கண் ஆடும் விளங்கிலென்க.
தெற்றியென்பதனைக் கைகோத்தாடும் குரவையென்பாரும் உளர்.
பொறைய! கபிலன் இன்று உளனாயின், நன்றுமனென்ற நின் ஆடு
கொள்வரிசைக்கொப்பப் பகைவரைக்கடப்பை யான் தாழாது பாடுவேன்;
நின்புகழ் விரிப்பின் அகலும்; தொகுப்பின் எஞ்சும்; ஆதலான்,
எமக்குக் கைம்முற்றல; ஒளியோர் பிறந்த இம்மலர்தலையுலகத்து வாழே
மென்றலும் அரிதென மாறிக்கூட்டுக.
தாழாது செய்யுட்செய் செந்நாவென இயைப்பினும் அமையும்.
‘ஒளியோர்’ என்றது கபிலன் முதலாயினோரை.
வாழேமென்றலும் அரிதென்றகருத்து, பாடாதிருத்தலும் அரி
தென்றதாக்கி யாமும் வல்லபடி பாடிப்போதுவேமென்றதாகக் கொள்க.
நன்றுமன் என்பது கழிவின்கண் வந்தது.
பாடுவன்மன்னாலென்றவழி, மன்னும் ஆலும் அசைநிலை.
பாடுவன்மன்னென்பதனை அல்லீற்றுத் தனித்தன்மைவினையாக்கி,
நின்வரிசைக்கொப்ப, நின்பகைவரைக்கடப்பைப் பாடுவேன்; அதனால்,
விரிப்பின் அகலும்; தொகுப்பின் எஞ்சும்; மம்மர்நெஞ்சத்து எமக்கு
நின்புகழ் கைம்முற்றலவென அவன்புகழை மேம்படுத்துக் கூறியவாறாக
உரைப்பினுமமையும். இப்பொருட்குப் பாடுவன்மனென்றதனை
ஒழியிசையாகக் கொள்க.
‘சிறந்தசெய்யுள்’ என்றும், ‘செய்யுட்செய்தசெந்நா’ என்றும் பாடம்.
(54) எங்கோ னிருந்த கம்பலை மூதூர்
உடையோர் போல விடையின்று குறுகிச்
செம்ம னாளவை யண்ணாந்து புகுதல்
எம்மன வாழ்க்கை யிரவலர்க் கெளிதே
இரவலர்க் கெண்மை யல்லது புரவெதிர்ந்து
வான நாண வரையாது சென்றோர்க்
கானா தீயுங் கவிகை வண்மைக்
கடுமான் கோதை துப்பெதிர்ந் தெழுந்த
நெடுமொழி மன்னர் நினைக்குங் காலைப்
பாசிலைத் தொடுத்த வுவலைக் கண்ணி
மாசு ணுடுக்கை மடிவா யிடையன்
சிறுதலை யாயமொடு குறுகல் செல்லாப்
புலிதுஞ்சு வியன்புலத் தற்றே
வலிதுஞ்சு தடக்கை யவனுடை நாடே.
திணையும் துறையும் அவை. (வாகை, அரசவாகை) சேரமான் குட்டுவன்
கோதையைக் கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக்குமரன்
பாடியது.
(இ - ள்.) எம்முடைய இறைவன் இருந்த ஓசையையுடைய பழைய
ஊரிடத்து அதனையுடையவர்களைப்போலக் காலம்பாராதே அணுகித்
தலைமையையுடைய நாளோலக்கத்தின்கண்ணே தலையெடுத்துச்
செம்மாந்து சென்று புகுதல் எம்மைப் போலும் வாழ்க்கையையுடைய
இரப்போருக்கு எளிது; இங்ஙனம் இரப்போர்க்கு எளிதாவ